Friday, October 17, 2014

பறை இசையின் பெருமைபேசும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


பறை இசை தமிழர் இசையென்றும் ஆற்றல் மிக்க இசையென்றும் இப்போது அது சாதி எல்லைகளைக் கடந்து மையநீரோட்டத்துக்கு வந்துவிட்டதென்றும் நீங்கள் முன்வைக்கும் கருத்துகள் மகிழ்ச்சி தருகின்றன. நீங்கள் மெய்சிலிர்க்க விவரிக்கும் பறை இசையை தலித் ஒருவரின் இறுதிச் சடங்கிலோ அல்லது தலித் தெருவில் நிகழும் ஒரு கொண்டாட்டத்திலோ அல்லது தலித்துகளின் கோயில் விழாவிலோ 
பிறர் இசைப்பதாக உங்களால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா? 

பறை உங்களுக்கு இசைக்கருவி ஆனால் ஒரு தலித்துக்கு அது இழிவின் குறியீடு. போர்ப்பறை என்பதெல்லாம் அதை மறைத்துக்கொள்ள ஒரு உபாயம் அவ்வளவே! பறை அடித்துதான் ஜீவிக்கவேண்டுமென்ற நிலை கிராமப்புறத்தில்கூட இன்று எவருக்கும் கிடையாது. பறை அடித்து சம்பாதிக்கும் கூலி டாஸ்மாக்குக்குத்தான் சென்று சேர்கிறது. 

தோழர் மணிமாறன் அவர்களே! 'சாவுக்கு பறை அடிக்கமாட்டோம் ' என்று சத்தியம் செய்வதில் பயனில்லை. அதற்குப்பதிலாக, தலித் எவருக்கும் பறை அடிக்க பயிற்சி தரமாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். 

உயர்நீதிமன்றம் ஒலி மாசு என்ற அடிப்படையில்தான் தப்பாட்டத்துக்கும் செண்டை மேளத்துக்கும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதன் அடிப்படையில் பட்டாசுகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. தப்பாட்டம் குறித்த கட்டுப்பாடுகளைக் கறாராக நடைமுறைப்படுத்தும் காவல்துறை ஒலிமாசு குறித்த விதிகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். 

No comments:

Post a Comment