Thursday, May 5, 2016

மெஜாரிட்டி ஆட்சியின் கேடு!

( 2014 ஆம் ஆண்டு நான் எழுதிய முகநூல் பதிவு ) 

இந்தத் தேர்தலில் 272 இடங்களைக் கைப்பற்றவேண்டும் என்ற இலக்கோடு பாஜக பிரச்சாரம் செய்தாலும் அதற்கு 172 இடங்களாவது கிடைக்குமா என்ற நிலைதான் உள்ளது. பாஜகவுக்கு மட்டுமல்ல எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

ஒரு கட்சி ஆட்சி அமைவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதே எனது கருத்து. ஒரு கட்சி ஆட்சியின்போதும் கூட்டணி ஆட்சிகளின்போதும் மத்திய அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இதை உணரலாம். ஜனநாயக ஆட்சி முறையைவிட சர்வாதிகார ஆட்சி முறையைத்தான் நமது தேசியக் கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதைப் பல உதாரணங்களின்மூலம் நிரூபிக்க முடியும். ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவேண்டும் என்பதுகூட இல்லை அதற்கு 200 இடங்கள் கிடைத்துவிட்டாலே ஆபத்துதான். ஏனெனில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க மாநிலக் கட்சிகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. 200 இடங்களை வைத்துக்கொண்டே தனிக்கட்சி ஆட்சிபோல ஆளமுடியும் என்பதைக் கடந்தமுறை காங்கிரஸ் காட்டிவிட்டது. 

2004 ஆம் ஆண்டைப்போல 2009 தேர்தலிலும் காங்கிரஸ் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தால் இடதுசாரிக் கட்சிகளும் அதே அளவு இடங்களைப் பெற்றிருந்தால் இந்த அளவுக்கு மோசமான ஆட்சியாக காங்கிரஸ் ஆட்சி இருந்திருக்காது. 

கூட்டணி ஆட்சி என்றால் அதற்குக் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் இருக்கவேண்டும். அந்த ஆட்சியை வழிநடத்த கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படவேண்டும். பெரிய கட்சியின் விருப்பத்துக்கு அதை விட்டுவிடாமல் இவை இரண்டும் கட்டாயமாக்கப்படவேண்டும். 

உருவாகப்போகும் ஆட்சியில் மாநிலக் கட்சிகளுக்கு முக்கிய பங்கிருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த வாய்ப்பைப் பெறப்போகும் கட்சிகள் மாநில நலன்களை முன்னிறுத்தி அதுவொரு கூட்டணி ஆட்சியாக மட்டும் இருந்துவிடாமல் கூட்டாட்சியாக மாறுவதற்கு வழிவகுக்கவேண்டும் என்பதே என் அவா.

No comments:

Post a Comment