Showing posts with label ltte. Show all posts
Showing posts with label ltte. Show all posts

Tuesday, October 9, 2012

சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் மறுப்பு



இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட 
   எரிக் சொல்ஹேம்தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் 

2009ம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்க நார்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்ட்த்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்ட்தாகவும்,தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த பிப்ரவரி கோலாலம்பூர் கூட்டத்தில், புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது, ஆனால் எழுத்து மூலமாக எந்தத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை, எனவே அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது என்றார் ருத்ரகுமாரன்.அக் கூட்டத்தில் ஒரு விரிவான போர் நிறுத்தம் குறித்து விடுதலைப் புலிகள் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சார்க் மாநாட்டை ஒட்டி 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வார கால அளவுக்கு ஒருதலைப் பட்ச போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தும் அதை நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று கூறிய யோசனைகளை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் ரத்தக் களறியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று கூறுவது ஏற்கத் தக்கது அல்ல என்றும் அவர் கூறினார். இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் புலிகள் சரணடைந்திருந்தால் கூட அதை தவிர்த்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார். இலங்கை அரச படைகள் வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியது, மருத்துவ மனைகளில் குண்டு வீசியது போன்ற நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன என்றார் அவர்.

ஈழத்து இனப்படுகொலை : இறுதி நேரத்தில் நடந்தது என்ன ?


ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.

கடந்த வாரம் லண்டனில் பிபிசி அலுவலகம் வந்திருந்த எரிக் சொல்ஹேய்ம் அவர்களிடம் இந்த திட்டம் உருவான பின்னணி குறித்தும் அது ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது என்றும் பிபிசி தமிழோசை மற்றும் சிங்கள சேவைகள் சார்பில் செவ்வி காணப்பட்டது.


அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.அந்த செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கு எழுத்துவடிவில் காணலாம்.


எரிக் சொல்ஹேய்ம் பதில்:

இலங்கையின் சமாதானத்துக்காக முன்முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
எரிக் சொல்ஹேய்ம் மற்றும் பிரபாகரன்
எரிக் சொல்ஹேய்ம் மற்றும் பிரபாகரன்

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?

சொல்ஹேய்ம் பதில்:

அந்த நாட்களில் நான் இலங்கைக்கு செல்லவில்லை. ஆனால் ஒஸ்லோவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள் மூலமாகவும் இலங்கை அரச தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் இலங்கை அரசுடன் நாங்கள் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான ராணுவ ரீதியிலான வெற்றியை பெறுவதே இலங்கை அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்கிற உணர்வையே நாங்கள் பெற்றோம். அதேசமயம், விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்கு தோன்றியது.

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?

சொல்ஹேய்ம் பதில்:

அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது.

தமிழோசை கேள்வி:

அப்படியானால், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?

சொல்ஹேய்ம் பதில்:

போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு என்றே நான் நினைக்கிறேன். அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா 'பாதுகாப்பு வலயம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?

சொல்ஹேய்ம் பதில்:

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசில் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து அங்கே கரிசனை காணப்பட்டது.

தமிழோசை கேள்வி:

நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?

சொல்ஹேய்ம் பதில்:

இலங்கை பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டுகாலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை. இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

தமிழோசை கேள்வி:

இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?

சொல்ஹேய்ம் பதில்:

2009 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற ராஜீய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விகிலீக்ஸில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.

Tuesday, April 26, 2011

எனது வாழ்வு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது" : முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளி


[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 09:39 GMT ] [ தி.வண்ணமதி ]
விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள்.

இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் அனைத்துலக சஞ்சிகையான Time [Sunday, Apr. 24, 2011] வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

நன்றி : http://www.puthinappalakai.com/view.php?20110426103702




ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்த நேர்காணலின் போது அவள் பதற்றத்துடன் தனது விரல்களைப் பிசைந்துகொண்டிருந்தாள்.

இந்த முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளியுடன் நாங்கள் உரையாட ஆரம்பித்தபோது அவளது கைகளில் இருந்த அழகாக மடிக்கப்பட்ட லேஞ்சி எங்களது உரையாடல் முடிவுக்கு வந்த வேளையில் ஏதோ துணிக்கத்தையினைப் போல் கசங்கியிருந்தது.

நான் அவளது உண்மைப் பெயரைப் பயன்படுத்துவதை அவள் விரும்பவில்லை. பதிலாக தன்னைச் செல்வி என அழைக்குமாறு அவள் கூறினாள்.

விடுதலைப் புலிகள் அமைப்பினது பெண்கள் அணியின் முன்னாள் உறுப்பினரான இவள் தனது வாழ்வின் அடுத்த கணத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலைமையினை முதல் முதலாக உணர்கிறாள்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பல பெண் போராளிகளைப் போலவே இவளும் தானாக அமைப்புடன் இணையவுமில்லை, கட்டாயத்தின் பெயரில் இணைக்கப்படவுமில்லை. தற்போது புலிகளின் கிளர்ச்சி என்பது இல்லையென்றாகிவிட்டது. இவர்களது இராணுவ பலம் மே 2009ன் பின்னால் சிறிலங்கா அரச படையினரால் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.

1998ம் ஆண்டு செல்வி 18 வயதினை அடைந்திருந்த வேளையில் இவளது சகோதரனைத் தேடி கிழக்கே மட்டக்களப்பிலுள்ள இவளது வீட்டுக்குப் புலிகள் வந்திருந்தார்கள். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் அமைப்பில் இணைந்திருக்கவேண்டும் என்ற கொள்கையினைப் புலிகள் கொண்டிருந்தார்கள். புலிகளின் இந்த விதி அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகள் அனைத்திலும் கடுமையுடன் அமுல்படுத்தப்பட்டது எனலாம்.

இவளது குடும்பத்தினைப் பொறுத்தவரையில் வயதில் குறைந்த சகோதரன் அமைப்பில் இணையவேண்டும் அல்லது இரண்டு மூத்த பெண் பிள்ளைகளில் ஒருவர் இணையவேண்டும்.

வயதில் மூத்தவளாக இருந்த செல்வி புலிகளமைப்புடன் இணைந்துகொள்வதற்குத் துணிந்தாள். அன்று முதல் எட்டு ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றினாள். புலிகளமைப்பு சிறிலங்கா அரச படையினரின் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டிருந்த வேளையில் அவள் அமைப்பினை விட்டு வெளியேறினாள்.

இன்று விடுதலைப் புலிகள் என்றொரு அலகுமில்லை, போருமில்லை என்றாகிவிட்டது. குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் கையில் ஆயுதம் என்பவற்றுடன் தனது இளமைக்காலத்தினைத் தொலைத்துவிட்ட செல்விக்கு தற்போது ஒரு சில தேர்வுகளே உள்ளன.

"நான் எதனைச் செய்யமுடியும். நான் போதிய கல்வியறிவினைப் பெற்றிருக்கவில்லை, பணமும் இல்லை பணியும் இல்லை" எனத் தளதளத்த குரலில் இவள் கூறுகிறாள். "எனது வாழ்வு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது"

இலங்கைத் தீவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த போருக்குப் பலிக்கடா ஆகிப்போன இதுபோன்ற பெண்களின் கதைகள் இதேபோன்றவைதான்.

சிறிலங்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்குவந்துவிட்ட போதிலும் இரண்டு தரப்பிலுமுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னமும் அமைதியின் சிறுதுளிப் பலாபலனைக் கூடப் பெறவில்லை.

"போரின் விளைவாக வெளியே தெரியாமல் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக தனித்துநின்றோ அன்றி கூட்டாகவும் குரல் எழுப்புவது கடினமென இவர்கள் உணர்கிறார்கள்" என பெண்களுக்கான வழிகாட்டல் அமைப்பினது அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பாளர் அருந்ததி சந்திரதிலகே கூறுகிறார். போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் நாடுதழுவிய நிகழ்ச்சித்திட்டமொன்றை இந்த அமைப்பு அண்மையில் ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்வியைப் போல சந்தர்ப்ப சூழமைவாலோ அல்லது கட்டாயத்தின் பெயரிலோ புலிகளமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஏராளம் பெண்கள் இங்குள்ளனர்.

சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் 11,000 உறுப்பினர்களில் 3,000 பேர் பெண்கள். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்களில் அரைப் பகுதிக்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுதவிர போரின் இறுதிநாட்களில் இரண்டு தரப்புக்கும் இடையிலான மோதல்களின் நடுவே சிக்கி பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட கணவனை இழந்தோராக்கப்பட்ட பிறிதொரு தொகுதியினர் உள்ளனர். அத்துடன் கொல்லப்பட்ட, மாற்று வலுவுடையோர் ஆக்கப்பட்ட மற்றும் காயமடைந்த இராணுவத்தினரின் மனைவிமார் குடும்பப் பொறுப்பினைச் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

"சமூகத்தின் மத்தியில் தனித்து விடப்பட்டிருக்கும் இந்த வகையினரில் அதிகமானோர் தங்களது இருபதுகளில் இருக்கும் அதேநேரம் பொருத்தமான தொழில்வாய்ப்பினையோ அல்லது தொழில்வாய்ப்பினைப் பெறக்கூடிய கல்வியறிவு மற்றும் தொழில்சார் பயிற்சிகளையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை" என அருந்ததி சந்திரதிலகே கூறுகிறார்.

போர் இடம்பெற்ற முன்னாள் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் வன்னிப் பிராந்தியத்திலுள்ள 110,000 குடும்பங்களில் 30 சதவீதமானவை பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களாகும்.

பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் கனகநேசன் சிவகௌரியின் குடும்பமும் ஒன்று.

2009ம் ஆண்டு ஏப்பிரலில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதலில் சிக்குண்டு இவளது கணவன் உயிர் நீத்தான். இதன் பின்னர் போதிய கல்வி அறிவினைப் பெறாத 33 வயதுடைய சிவகௌரி தனது வயது முதிர்ந்த பெற்றோரையும் ஐந்து பிள்ளைகளையும் வைத்துப் பராமரிப்பதற்கு தையல் தொழில்செய்து வருகிறாள்.

கண்பாற்வையற்ற தாய், முழங்கால் பாதிக்கக்பட்ட்ட தந்தையுடன் அதிக சிரமப்படுகிறாள் இவள். அதிகளவு வேலை வரும் நாளில் வெறும் இரண்டு டொலர்களையே (200 ரூபாய்) இவளால் சம்பாதிக்க முடிகிறது. "எனது வாழ்வில் தினமும் போராட்டம்தான். வேலை எதுவுமற்ற நாளில் குடும்பம் அதிகம் அல்லலுறும்" எனத் துயரத்துடன் கூறுகிறாள்.

சிறிலங்காவினது கிழக்குப் பிராந்தியத்தில் போர் 2007ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்து விட்டது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 49,000 கணவனை இழந்தோர் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. அதுவும் இவர்களில் பலர் தங்களது இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கிறார்கள். குடும்பத்தலைவன் மடிந்துவிட்ட நிலையில் புதிய சுமைகளையும் பொறுப்புக்களையும் சுமக்கும் இந்த துணையிழந்த பெண்கள் இவ்வாறுதான் வாழவேண்டும் என இன்னமும் சமூகம் கட்டளையிடுகிறது.

"இங்குள்ள சமூகக் கட்டமைப்பினைப் பொறுத்தவரையில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஆண்களிடமே இருக்கிறது" என்கிறார் அருந்ததி சந்திரதிலகே.

பெண்களுக்கான வழிகாட்டல் அமைப்பானது இதுபோன்ற குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்கும் பெண்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்குவதோடு சுயதொழில் திட்டங்களையும் முன்னெடுக்கிறது. தவிர, பெண்கள் தொழில்வாய்ப்பினைப் பெறுவதற்கான உதவிகளையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

"நாடு பூராகவும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு இதுபோன்ற உதவிகள் தேவை என்பதை நாங்கள் மெதுவாக உணர்கிறோம்" என்கிறார் அருந்ததி. இந்தப் பெண்கள் தமக்கான தொழில்வாய்ப்பினைப் பெறுகின்றபோதும் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தவர்கள் வேறுபட்ட கோணத்திலேயே இன்னமும் பார்க்கப்படுகிறார்கள். "இங்கு ஏராளம் பிரச்சினைகள் உள்ளன" என அருந்ததி கூறுகிறார்.

தான் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி செல்வியும் நன்கறிவாள். "என்னை யார் திருமணம் செய்துகொள்வார்கள்?" என்ற கேள்வியினைத் தொடுக்கிறாள் செல்வி. "எனது கிராமத்தவர்கள்கூட என்னிலிருந்து சற்று எட்ட விலகியிருக்கவே விரும்புகிறார்கள். தீண்டத்தகாத ஒருத்தியா, வேண்டப்படாத ஒரு சமூகத்திலிருந்து வந்தவளாகவே என்னை அனைவரும் பார்க்கிறார்கள்" என்கிறாள் செல்வி.