Wednesday, October 29, 2014

கொள்ளிக்கட்டையால் தலை சொறியும் இந்துத்துவ அமைப்புகள்



ராஜேந்திர சோழன் முடிசூட்டிய ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடப்போவதாக சங்கப் பரிவார அமைப்புகள் அறிவித்திருப்பதை நகைமுரண் என்றுதான் சொல்லவேண்டும். ராஜேந்திர சோழன் கி பி 1017 ஆம் ஆண்டில் இலங்கைமீது படையெடுத்து சிங்கள அரசனாக இருந்த ஐந்தாம் மஹிந்தவை சிறைபிடித்து தமிழ்நாட்டுக்கு இழுத்து வந்தவன். இலங்கை முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்தவன். இலங்கையை வெற்றிகொள்வதில் தனது தந்தை ராஜராஜன் பாதியில் விட்ட பணியை முடித்தவன். மத்தியில் ஆளும் பாஜக அரசோ இலங்கையை நட்பு நாடாகப் பார்க்கிறது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது. 

ராஜேந்திர சோழனைக் கொண்டாடுவது தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியலுக்குப் பயன்படுவதைக்காட்டிலும் சிங்கள எதிர்ப்புணர்வை அதிகரிக்கவே உதவும்.

Monday, October 27, 2014

தமிழ்நாட்டில் தலித் ஒருவரை முதல்வராக்குவது எப்போது?



தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தபோதிலும் இப்போதே அதற்கான அணிசேர்க்கைகள் உருவாகத் தொடங்கிவிட்டன. யார் முதல்வர் என்ற கேள்வி ஊடகங்களில் உலாவரத் தொடங்கிவிட்டது. 

தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதென்றும் அதை நிரப்புவதற்கு இந்த நடிகர் வருவாரா அந்த நடிகர் வருவாரா என்றும் ஊடக மாயைகள் உருவாக்கப்படுகின்றன. சினிமாவை வைத்தே பக்கங்களை நிரப்பும் அச்சு ஊடகங்களும், சினிமாவின் நீட்சியாகவே செயல்படும் காட்சி ஊடகங்களும் திரைப்படத் துறையிலிருந்து ரட்சகர்களைக் கண்டுபிடிக்க நினைப்பதில் வியப்பில்லை. ஆனால் நாம் அதற்கு இன்னும் எத்தனைகாலம் பலியாகிக்கொண்டிருப்பது? என்ற கேள்வியை யார் கேட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ தலித்துகள் கேட்டுக்கொண்டாகவேண்டும்.

இந்தியாவில் தலித் மக்கள்தொகை இருபது விழுக்காட்டுக்குமேல் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிற்படுத்தப்பட்டோர் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்பே தலித்துகள் அமைப்பாகத் திரண்டு போராடிய நீண்ட வரலாறுகொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஆந்திராவிலும், உத்தரப்பிரதேசத்திலும், மஹராஷ்டிராவிலும், ஏன் வெறும் 16% தலித் மக்கள்தொகைகொண்ட பீஹாரிலும்கூட தலித் ஒருவர் முதலமைச்சராக முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அதைப்பற்றிப் பேசக்கூட முடியாத நிலை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த இழிநிலைத் தொடர்வது? தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என அறிவிக்கும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என எப்போது தமிழ்நாட்டு தலித்துகள் உறுதிபூணுகிறார்களோ அப்போதுதான் இந்த நிலை மாறும். அந்த அரசியல் தற்சார்பு நிலையை உருவாக்குவதே இன்று தலித் இயக்கங்களின் முதன்மையான பணி. 

Saturday, October 25, 2014

பீஹாரும் தமிழகமும்: பாஜக காலூன்றுவதைத் தடுக்க திராவிடக் கட்சிகள் செய்யவேண்டியது என்ன? - ரவிக்குமார்



பிற்போக்குத் தனத்தின் எடுத்துக்காட்டாக நாம் பீஹாரைச் சொல்வது வழக்கம். ஆனால் பலவிதங்களில் பீஹாருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒற்றுமை உண்டு. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் அரசியல் எழுச்சி, அதன் விளைவாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்பவற்றில் பீஹாருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒற்றுமையைக் காணலாம். பீஹாரில் உயர்சாதியினர் சுமார் 14% முஸ்லிம்கள் 17% தலித்துகள் 16% பிற்படுத்தப்பட்டோர் சுமார் 51% உள்ளனர்.பீஹாரின் மக்கள் தொகையில் 85% கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். 

வளர்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்து அண்மையில் பீஹார் மிகப்பெரிய வியப்பை உண்டாக்கியது. அதை ஊடகங்களும் உரத்துப் பேசின. ஆனால் அதைவிடவும் மிகப்பெரிய ஆச்சர்யம் பீஹாரில் தலித் ஒருவர் முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். பீஹாரை ஆண்டுகொண்டிருந்த ஐக்கிய ஜனதா தளம் பாராளுமன்றத் தேர்தலில் மிகமோசமான தோல்வியை சந்தித்த பிறகு பீஹார் அரசியலில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. அரசியலில் எதிர்த் துருவங்களாக இருந்த ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் கைகோர்த்தன. எவரும் எதிர்பார்க்காத விதத்தில் தலித் ஒருவர் முதல்வராக்கப்பட்டார். 

தமிழ்நாட்டோடு ஒப்புநோக்கினால் பீஹாரில் தலித்துகளின் எண்ணிக்கை சுமார் 5% குறைவு. அங்கு சாதிய ஒடுக்குமுறை அதிகம். ஆனால் அந்த மாநிலத்தில் தலித் ஒருவர் முதல்வராக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை. 

பீஹாரைப்போலவே தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் அரசியலும் இப்போது ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு தருவதற்கு இங்கிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மனம் இல்லை. ஓட்டுக்குக் காசு கொடுப்பது, இலவசங்களைக் கொடுப்பது என்ற மலிவான உத்திகள் மூலம் தலித்துகளின் வாக்குகளை வாங்கிவிடலாம் என அவை கருதுகின்றன. இப்போதைக்கு அந்த உத்திகள் வெற்றியைக்கூட தரலாம். ஆனால் எப்போதும் தலித்துகளை இப்படி ஏமாற்ற முடியாது. 

தலித்துகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்ற திட்டத்தை யாரேனும் முன்வைத்தால் அப்போது இந்த இலவசங்களும் பணமும் செல்லாமல் போய்விடும். ஒவ்வொரு தேர்தலிலும் தலித்துகளின் வாக்குகள்தாம் தமிழ்நாட்டின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன. இதை திராவிடக் கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். 

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பாஜக இப்போதைக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் உத்தியையே பின்பற்றிவருகிறது. இங்குள்ள பிற்படுத்தப்பட்டோரின் கட்சிகளோடுதான் அது கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் அந்தக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலுக்குத் தொடரக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே அது தனது தேர்தல் உத்தியை மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

பிரபலமான நடிகர்களைக் கட்சியில் சேர்த்தால் வெற்றிபெறலாம் என்பது தவறான வழிமுறையாகும். தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் அந்த வழிமுறையை பாஜகவுக்கு யார் சொல்லித் தந்தார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவேண்டுமெனில் அது தலித்துகளை நோக்கித்தான் தனது கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.பீஹாரில் நித்திஷ்குமார் கையாண்ட உத்தியை பாஜக தமிழ்நாட்டில் கையில் எடுக்கவேண்டும். அதைத் தவிர அக்கட்சிக்கு வேறு வழியில்லை. 

தலித் அஸ்திரத்தை பாஜக கையிலெசடுப்பதற்கு முன்னால் தமிழ்நாட்டிலிருக்கும் திராவிடக் கட்சிகள் விழித்துக்கொள்வார்களா? ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் விதத்தில் பரந்துபட்ட சமூக அணிசேர்க்கையை உருவாக்குவார்களா? அப்படியானதொரு ஜனநாயக அணுகுமுறையைக் கையிலெடுக்காமல் தொடர்ந்தும் தலித்துகளின் ஆதரவைப் பெற முடியாது என்பதை இப்போதாவது திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா? 

Friday, October 17, 2014

பறை இசையின் பெருமைபேசும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


பறை இசை தமிழர் இசையென்றும் ஆற்றல் மிக்க இசையென்றும் இப்போது அது சாதி எல்லைகளைக் கடந்து மையநீரோட்டத்துக்கு வந்துவிட்டதென்றும் நீங்கள் முன்வைக்கும் கருத்துகள் மகிழ்ச்சி தருகின்றன. நீங்கள் மெய்சிலிர்க்க விவரிக்கும் பறை இசையை தலித் ஒருவரின் இறுதிச் சடங்கிலோ அல்லது தலித் தெருவில் நிகழும் ஒரு கொண்டாட்டத்திலோ அல்லது தலித்துகளின் கோயில் விழாவிலோ 
பிறர் இசைப்பதாக உங்களால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா? 

பறை உங்களுக்கு இசைக்கருவி ஆனால் ஒரு தலித்துக்கு அது இழிவின் குறியீடு. போர்ப்பறை என்பதெல்லாம் அதை மறைத்துக்கொள்ள ஒரு உபாயம் அவ்வளவே! பறை அடித்துதான் ஜீவிக்கவேண்டுமென்ற நிலை கிராமப்புறத்தில்கூட இன்று எவருக்கும் கிடையாது. பறை அடித்து சம்பாதிக்கும் கூலி டாஸ்மாக்குக்குத்தான் சென்று சேர்கிறது. 

தோழர் மணிமாறன் அவர்களே! 'சாவுக்கு பறை அடிக்கமாட்டோம் ' என்று சத்தியம் செய்வதில் பயனில்லை. அதற்குப்பதிலாக, தலித் எவருக்கும் பறை அடிக்க பயிற்சி தரமாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். 

உயர்நீதிமன்றம் ஒலி மாசு என்ற அடிப்படையில்தான் தப்பாட்டத்துக்கும் செண்டை மேளத்துக்கும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதன் அடிப்படையில் பட்டாசுகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. தப்பாட்டம் குறித்த கட்டுப்பாடுகளைக் கறாராக நடைமுறைப்படுத்தும் காவல்துறை ஒலிமாசு குறித்த விதிகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். 

Wednesday, October 8, 2014

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை


நான் நண்பனை நேசித்தேன்
அவன் போய்விட்டான் என்னைவிட்டு
சொல்வதற்கு ஒன்றும் இல்லை
தொடங்கியதுபோலவே மிருதுவாக
கவிதை இத்துடன் முடிகிறது
நான் நண்பனை நேசித்தேன்

தமிழில்:ரவிக்குமார்

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை



வழிகள் 
========
கை மணிக்கட்டில் ஒரு வெட்டு
ஒரு வாய் அமிலம்
மூளையைத் துளைக்கும் ஒரு தோட்டா
- மரணம் தாயைப்போல வரும்
உன்னைத் தன் கரங்களில் ஏந்திக்கொள்ளும்

தமிழில் : ரவிக்குமார்

ஹரியானாவில் தலித்துகள் காங்கிரசைத் தோற்கடிக்கப்போகிறார்கள்?



ஹரியானாவின் மக்கள் தொகையில் சுமார் 20% தலித்துகள் உள்ளனர். அவர்கள் இதுவரை காங்கிரஸ் கட்சியைத்தான் ஆதரித்து வந்தார்கள். ஆனால் காங்கிரஸோ அந்த மாநிலத்தில் இருக்கும் ஜாட் சாதியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தலித்துகளுக்கு எதிராக அம் மாநிலத்தில் அதிகரித்துவரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறியதோடு சாதிய வன்முறையில் ஈடுபடும் ஜாட்டுகளுக்கு ஆதரவாக அவர்களை ஊக்குவித்துவருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மிர்ச்பூரில் தலித் குடும்பம் ஒன்று வீட்டோடு வைத்து உயிரோடு எரிக்கப்பட்டது. அந்த கொடூர சம்பவத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் ஹரியானாவில்  19 தலித்துகள் கொல்லப்பட்டனர், 67 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர் என என்சிஆர்பி அறிக்கை குறிப்பிடுகிறது. 

தலித்துகளின் காங்கிரஸ் எதிர்ப்பு பாஜகவுக்குத்தான் பயன்தரப்போகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதுதான் நடந்தது. அதற்காக காங்கிரஸுக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொளவதற்கு சமம். 

தம்மை வெறும் வாக்குவங்கியாகக் கருதி ஏமாற்றிவரும் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் இந்தத் தேர்தலில் தலித்துகள் பாடம் கற்பிப்பார்கள்.