Monday, December 20, 2010

களப்பிரர் காலம் இருண்ட காலமா ?

பாண்டிச்சேரியில் இருக்கும் E F E O நிறுவனம்  இன்று ( 20.10.2010) களப்பிரர் காலம் குறித்த ஒரு நாள் பட்டறை ஒன்றை நடத்தியது. அதில் பார்வையாளராகக் கலந்துகொண்டேன். முற்பகலில் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் தயாளனும் , தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறையைச் சேர்ந்த முனைவர் செல்வகுமாரும் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். திரு.தயாளன் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தில் சுமார் நூற்றியிருபதுக்கும் அதிகமான பௌத்த மையங்கள் உருவானதையும் அவை அப்போது சமூகத்தில் பெற்றிருந்த செல்வாக்கையும் விரிவாக எடுத்துரைத்தார். பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட தகவல்களும், அங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்களும் பௌத்தம் செழித்திருந்ததன் அடையாளமாகத் திகழ்வதை அவர் ஒளிப்படங்களோடு விளக்கினார். இவ்வாறு பௌத்தம் செழித்திருந்தது என்றால் அதற்கு அப்போது அரச ஆதரவு இருந்திருக்கிறது என்றே பொருள். ஏனெனில் சங்க காலத்தில் பௌத்தம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. பட்டினப்பாலையில் ஓரிடத்தில் மட்டுந்தான் அதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும்கூட பௌத்தம் குறித்ததா என்பது ஐயமாகவே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அப்போது தமிழ்நாட்டை ஆண்டதாகக் கூறப்ப்டும் களப்பிரர்களை பௌத்தர்கள் அல்லது சமணர்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது என்றாலும் அவர்கள் காலத்தில் பௌத்தம் செழித்திருந்ததை உறுதியாகக் கூறலாம் என்று அவர் தெரிவித்தார்.



அடுத்ததாகப் பேசிய திரு. செல்வகுமார் , சங்க காலம் மற்றும் பிற்காலச் சோழர்கள் குறித்த மிகையான மதிப்பீடுகள் காரணமாக இடைப்பட்டக் காலம் ‘ இருண்ட காலம் ‘ என அழைக்கப்பட்டதாகக்  குறிப்பிட்டார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டுவரை கிரீஸ் , ரோம் முதலான பகுதிகளோடு வாணிபத் தொடர்பு மிகவும் மும்முரமாக நடந்திருக்கிறது. அதன் பின்னர் அதில் ஒரு தொய்வு ஏற்பட்டு அதற்குப் பதிலாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு வாணிபம் தீவிரம் அடைந்தது என்பதைப் பார்க்க முடிகிறது. அக்காலக் கட்டத்தில் சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் இங்கு பௌத்தம் தழைக்கக் காரணமாக அமைந்தது என அவர்   கூறினார். அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பீங்கான் பொருட்கள் பற்றி விவரித்த அவர் இத்தகையக் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றார்.



சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பற்றி நல்லதொரு நூலை எழுதியிருக்கும் பால் யங்கர் என்பவர் , சிதம்பரம் ஒரு காலத்தில் களப்பிரர்களின் தலை நகராக இருந்தது என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி அதுபற்றிய உங்களின் கருத்து என்ன என்று நான் கேட்டபோது ‘ களப்பிர மன்னன் ஒருவனுக்கு சிதம்பரத்தில் இருந்த தீக்‌ஷதர்கள் முடிசூட்ட மறுத்துவிட்டதாக ஒரு கதை உண்டு. களப்பிரர்களின் தலைநகராக சிதம்பரம் இருந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்க முடியுமா ? எனத் தயாளன் என்னிடம் வினவினார். சத்ரபதி சிவாஜிக்கு நேர்ந்ததை நினைவில்கொண்டால் இந்தக் கேள்வி அர்த்தமற்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.நான் கவனப்படுத்த முயன்றது, சிதம்பரம் நடராஜர் கோயில் பௌத்த நோக்கிலிருந்து ஆராயப்படவேண்டும் என்பதைத்தான்.

சிதம்பரம் கோயில் வளாகத்திலிருக்கும், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்த அவனியாளப்பிறந்தான் என்ற சிற்றரசனது கல்வெட்டு அக்கோயிலின் வளாகத்தில் காமக்கோட்டம் ஒன்று இருந்ததுபற்றியும் அதில் குழந்தைகளுக்குப் பாலமுது வழங்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இந்தச் செய்தியை ஆராய்ந்திருக்கும் முனைவர் ஆ.பத்மாவதி அது பௌத்தத்தோடு கொண்டிருந்த தொடர்பின் அடையாளம்தான் என்று வலியுறுத்தியிருக்கிறார். நடராசர் என்பதே புத்தரின் பெயர்களில் ஒன்றுதான் என வீரசோழியத்தை ஆதாரமாககொண்டு அயோத்திதாசப் பண்டிதர் கூறியிருப்பதையும் நாம் நினைவுபடுத்திப் பார்க்கலாம் . சிதம்பரத்துக்கு அருகில் இருக்கும் திருச்சோபுரம், திருப்பாதிரிப்புலியூர் என்கிற கடலூர் ஆகிய இடங்களின் பௌத்தத் தொடர்புகளையும் இத்துடன் சேர்த்து ஆராய்ந்தால் அது மேலும் துலக்கம் அடையும். தமிழ் பௌத்தம் குறித்த ஆராய்ச்சியில் சிதம்பரம் ஒரு முக்கிய மையமாக இருக்கும். அதைப்பற்றி இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது என் கருத்து.

பிற்பகலில் , எனது தொகுதியில் ‘ கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ தொடர்பான அரசு நிகழ்ச்சிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோடு கலந்துகொள்ளவேண்டியிருந்ததால் நான் சென்றுவிட்டேன். திரு. ழான் லுய்க் செவ்வியார் அங்கு இருந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் விரிவாக இதைப்பற்றி எழுதினால் உதவியாக இருக்கும்.  

No comments:

Post a Comment