Tuesday, April 26, 2011

புதிய வழிபாடு - 2


மல்லிகை மலர்களாலான 
மாலைகளைவிடவும் 
விலை அதிகம் கொண்டவை 
ரோஜா மாலைகள்
நீ இருந்திருந்தால் மல்லிகை மாலைகளே
போதுமென்றுதான் சொல்லியிருப்பாய்

எனினும் 
சிவப்பு ரோஜாக்களின் அழைப்பை
எவர்தான் மறுக்கமுடியும்?
அதிலும்,
தெளித்த நீர்த் திவலைகள்
குளியலறையிலிருந்து திரும்பும்
உன் முகத்தை 
நினைவுபடுத்தும்போது ?

நீ வருவதற்குள்ளாக 
இரண்டு மாலைகளைப் 
பேரம் பேசாமல் வாங்கினேன்

மாதாவுக்குத்தான் 
வாங்கினோம் என்றாலும் 
அங்கே வந்தது 
வழிபடத்தான் என்றாலும் 

கைகளில் பிடித்திருந்த மாலைகள்
நம்மை ஒருகணம் 
மணமக்களாக்கியதை
சுற்றியிருந்த கூட்டமெல்லாம் 
நம் உறவினர்களாக மாறியதை


நீயும் உணர்ந்தாயா?

1 comment: