Showing posts with label dinamani. Show all posts
Showing posts with label dinamani. Show all posts

Wednesday, May 15, 2013

அடித்தட்டுமக்களின்விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவர் சுவாமி சகஜானந்தா!



ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவரும், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு கல்வியை புகட்டியவருமாவார் சுவாமி சகஜானந்தா. அச்சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர்
ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவுக்கு அரசியலை பயன்படுத்தியவரும், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு கல்வியை புகட்டியவருமாவார் சுவாமி சகஜானந்தா. அச்சிறப்பு வாய்ந்த சுவாமி சகஜானந்தாவிற்கு சிதம்பரத்தில் அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆரணிக்கு அருகே உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை-அலமேலு தம்பதியினருக்கு 1890-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முனுசாமி. தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக்கல்வியை பயன்ற இவர் உயர்நிலைக்கல்வியை  திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். அங்கு அவருக்கு சிகாமணி என்ற பெயர் சூட்டப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாற்ற பாதிரியார்கள் முயன்ற போது, அதற்கு எதி்ர்ப்பு தெரிவித்து பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பினார்.

பிழைப்பு தேடி அவரது பெற்றோர்கள் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களோடு அங்கு சென்ற சகஜானந்தாவிற்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. தனது 17 வயதில் தான் சன்னியாசியாகப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு, வீட்டை வி்ட்டு வெளியேறினார். பின்னர் பல ஊர்களில் அலைந்து திரிந்து பல ஆன்மீகவாதிகளை சந்தித்து அவர்களிடம் மத சம்பந்தமான கல்வியை பெற்றார். யோகி நீலமேகசுவாமிகள், தட்சணாசுவாமிகள் ஆகிய ஆன்மீகவாதிகள் அடங்குவர். அதிலும் குறிப்பாக சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகளை சந்தித்ததுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அவர்தான் சகஜானந்தாவை சிதம்பரத்திற்கு சென்று அங்கே நந்தனின் வாரிசுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தினார்.
அ.முருகேசன்பிள்ளை 1910-ம் ஆண்டு சகஜானந்தாவை அழைத்துக் கொண்டு சென்று சிதம்பரத்தில் திருநாளைப் போவார் தீயில் மூழ்கிய ஓமக்களுத்தின் கரையில் ஸ்ரீஆறுமுகசுவாமியும், பின்னத்தூர் ஸ்ரீலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறிய சந்திரத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியதாக சுவாமி சகஜானந்தாவை விவரித்திருக்கிறார். சிதம்பரத்திற்கு வந்த சுவாமி சகஜானந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவ விரும்பி தொடங்கினார். கல்விச்சாலை ஒன்றையும்  ஏற்படுத்த முடிவு எடுத்து 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி நந்தனார் கல்விக்கழகத்தை நிறுவினார். நாட்டுக் கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்ததின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, சைவ சமய பிரசாரத்தை மேற்கொண்டார். அந்த பயணம் நந்தனார் மடத்திற்கும், கல்விச்சாலைக்கும் நிதிஉதவி பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.

சுவாமி சகஜானந்தா தொடங்கிய நந்தனார் கல்விச்சாலை கூரைக்கொட்டகையில்  முதலில் 25 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. 1918-ம் ஆண்டு பள்ளிக்கூட்டம் கட்டுவதற்கு அபோதைய சென்னை மாகான உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு ராஜகோபாலாச்சாரியார் பள்ளிக்காக 32 ஏக்கர் நஞ்சை நிலத்தை அளித்தார். 1926 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் காந்தியடிகள் நந்தனார் பள்ளிக்கு வந்து பார்வையிட்ட பின்னர் அப்பள்ளி பிரபலமானது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.

முதன் முதலில் சுவாமி சகஜானந்தாவிற்கு தமிழகஅரசு மணி மண்டபம் கட்ட வேண்டும் என குரல் கொடுத்த காட்டுமன்னார்கோயில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் தெரிவித்தது: புரட்சியாளர் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கேட்டு போராடிய காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சுவாமி சகஜானந்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய கொடுமையிலிருந்து விடுபட பெளத்தத்தை வழியாக காட்டினார். ஆன்மீகவாதியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களின் விடிவிற்கு அரசியலை பயன்படுத்தியவர் சுவாமி சகாஜனந்தா.

சுவாமி சகஜானந்தா 1926-ம் ஆண்டு சென்னை மாகான சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1932ம் ஆண்டு வரை மேலவை உறுப்பினராக பதவி வகித்த அவர் 1936 முதல் 1947 வரை மீண்டும் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு சேவையாற்றினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947-ல் சட்டப்பேரவை உறுப்பினரானார். 1959-ம் ஆண்டு மே 1-ம் தேதி அவர் இயற்கை எய்தும் வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். சட்டமேலவையிலும், சட்டப்பேரவையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக சகஜானந்தா பாடுபட்டார். சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட நந்தனார் பள்ளிகள் இன்று தமிழகஅரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
சுவாமி சகஜானந்தா ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பயங்கரம் சீனுவாசாச்சாரியிடம் சமஸ்கிருதத்தை பயின்றார். வ.உ.சி எழுதிய நூல்களுக்கு சுவாமி சகஜானந்தா சிறப்புப்பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையை எடுத்துக்காட்டுகிறது என்கிறார் துரை.ரவிக்குமார்.

தற்போது தமிழக சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர்  செ.கு. தமிழரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று விதி எண் 110-ன் கீழ் சிதம்பரத்தில் சுவாமி சுகஜானந்தாவிற்கு அவர் வாழ்ந்த இடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பினால் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Sunday, April 21, 2013

மணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர்

21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேணி ஆய்விதழ் குறித்து எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி.
இங்கே அதைப் படியுங்கள்: 


"நண்பர் ஒருவரின் மேஜையில் ரவிக்குமார்  நடத்தும் "மணற்கேணி' இருமாத இதழின் நவம்பர் - டிசம்பர் 2012 இதழ் இருந்தது.  இப்படி ஓர் அற்புதமான இலக்கிய ஆய்வு இதழை நண்பர் ரவிக்குமார் நடத்தி வருவதற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்.

புதுவையில் "மணற்கேணி' சார்பில் நடத்திய, "தமிழும் சமஸ்கிருதமும்' என்கிற ஆய்வரங்கச் சொற்பொழிவுகள் கட்டுரைகளாகத் தரப்பட்டிருக்கின்றன. அ. மணவாளன், இரா. கோதண்டராமன், பெ. மாதையன், இரா. அறவேந்தன், பக்தவத்சல பாரதி ஆகியோரின் சிந்தனையைத் தூண்டும் வாதங்கள் வருங்கால ஆய்வுகளுக்கே கூடத் தரவுகளாக அமையும் தன்மையன.

அம்பை எழுதியிருக்கும் "மரத்தடியில் திருவள்ளுவர்' என்கிற சிறுகதை, தமிழும் தமிழனும் இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. படித்து முடித்து விட்டு, அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்கு பதிலாக, மீண்டும் ஒருமுறை படிக்கத் தோன்றியது.
அரை நூற்றாண்டு காலத் தொல்லியல் ஆய்வைப் பற்றிய சிறப்புப் பகுதியில் படிக்க வேண்டிய 33 நூல்களையும், தொல்லியல் துறை தொடர்பாகச் செய்ய வேண்டிய 50 பரிந்துரைகளையும் தொகுத்து வழங்கி இருப்பது பயனுள்ள முயற்சி.
ஐயாயிரம் ரூபாய் கொடுத்து "மணற்கேணி'யின் புரவலராகலாம்; மூவாயிரம் கொடுத்து "மணற்கேணி' குழாமில் சேரலாம்; ஆயிரம் கொடுத்து "ஊருணி' திட்டத்தின் மூலம் யாருக்காவது "மணற்கேணி' பரிசளிக்கலாம். முன்னூற்று அறுபது கொடுத்து ஆண்டு சந்தாதாரர் ஆகலாம். என்ன செய்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு இலக்கியப் பணியாற்றிவரும் "மணற்கேணி' தொடர்ந்து வெளிவர உதவாமல் இருந்து விடாதீர்கள். தொடர்புக்கு9443033305 அல்லது manarkeni@gmail.com."
 http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/04/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article1554066.ece

Saturday, September 29, 2012

தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பேராசிரியர் மாதையன்


  
30 Sep 2012 05:09:11 AM IST

 
புதுச்சேரி, செப். 28: தமிழுக்கான சொற்பொருள் அகராதிகளை உருவாக்கும்போது, பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேராசிரியர் மாதையன் வலியுறுத்தினார்.
 மணற்கேணி இதழ் சார்பில் "தமிழும் சமஸ்கிருதமும்' எனும் தலைப்பில் ஆய்வரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேராசிரியர் மாதையன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
 தமிழில் தொல்காப்பியம் தரமான ஓர் காப்பியம். அதில் ஒரு குறைகூட காணமுடியாது. எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் இதுபோல் ஒரு காப்பியத்தை எழுத முடியாது.
 சங்ககால இலக்கியங்களுக்கு சொற்பொருள் அகராதிகளைத் தற்போது உருவாக்கும்போது சிலர், பொருள் பிழைகளுடன் உருவாக்குகின்றனர். தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
 இதுபோன்ற தமிழுக்கான ஆய்வரங்கங்கள் நடத்த, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மேலும் பலரை ஊக்குவிக்க வேண்டும்.
 இது தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தமிழ் ஆய்வுக்காக மத்திய அரசு அளிக்கும் நிதி முழுவதுமாகச் செலவிடப்படாதபோது, அது வடமொழி இலக்கிய ஆய்வுகளுக்கு மாற்றப்படுகிறது.
 எனவே தமிழ்மொழி ஆய்வுக்கான நிதியை முழுவதுமாகச் செலவிட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பேராசிரியர் மணவாளன்:
 சமஸ்கிருதம் ஒரு பண்பாட்டு மொழி. அது பேச்சு வழக்கில் உள்ள மொழி கிடையாது. எனவே சமஸ்கிருதத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. கி.மு.4-ம் நூற்றாண்டில் ராமாயணம், மகாபாரதம் முதலியவை தோன்றின. இந்த ராமாயணம் வட இந்தியாவில் இருப்பதுபோல், தென்னிந்தியாவில் இல்லை.
 இதிலேயே சில வேறுபாடுகள் உள்ளன. ராமாயண சமஸ்கிருத நடையிலும், மகாபாரத சமஸ்கிருத நடையிலுமே வேறுபாடுகள் உள்ளன.  அனைத்து துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டும் என்றார் அவர்.
பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி:
 தமிழையும், சமஸ்கிருதத்தையும் ஆராயம்போது ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர் ஆராயக் கூடாது. இரு மொழிகளையும் நன்கு தெரிந்தவர் ஆராயும் போதுதான் அப்பணி சிறப்பானதாக இருக்கும்.
 பல தமிழ் சொற்கள் சமஸ்கிருத சொற்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக நீலமாக இருக்கும் விண்(வானம்) வழிபாடுதான் விஷ்ணு வழிபாடாக மாறியதாக நான் கருதிகிறது.
  விண் என்ற சொல்லில் இருந்துதான் விஷ்ணு என்ற சொல் வந்துள்ளது. இதுதொடர்பாக, வளரும் இளம் தலைமுறையினர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 இந்த ஆய்வரங்கத்தை மணற்கேணி ஆசிரியர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். இதில் பல்வேறு பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.  ஆய்வரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வுப் பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=668706&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=தமிழ்%20அகராதிகளில்%20பிழைகள்%20ஏற்படுவதைத்%20தவிர்க்க%20வேண்டும்:%20பேராசிரியர்%20மாதையன்