Friday, July 29, 2011

'வேஷப் பிராமணரும்' 'தமிழ்ப் பிராமணரும்' - எதிர்வினை 1 நாக.இளங்கோவன்

எனக்குப் பட்டதை இங்கு எழுதுகிறேன்:

20 ஆம் நூற்றாண்டுக்கு முன் பின் என்று இரண்டு கோணங்களில் காணலாம்.

1) வடசொல் மீது மோகமும் அதுவே உயர்வு என்று எண்ணி அப்படித் தங்களை அழைத்துக் கொண்டிருக்கலாம்
என்று கருத வாய்ப்புள்ளது. மணிப்பிரவாள காலங்களில் இது தொடங்கி இருக்கக் கூடும். வடக்கே உள்ள பார்ப்பனர்கள் பிராமனர் என்று அழைத்துக் கொள்வதை ஒட்டி தாங்களும் அப்படி அழைக்கப் படுவதையே விரும்புகிறார்கள் என்று கருதலாம். அதோடு இந்தியப் பொது அடையாளமாக இதனைக் கருதுகிறார்களோ என்று எண்ணவும் இடம் இருக்கிறது.

ஐயரும் ஐயங்காரும் எப்படிப் பிராமணர் என்ற பொதுப்பெயரில் இந்திய அடையாளமிட்டுக் கொள்கிறார்களோ,
அப்படியே பள்ளர் பறையர் என்ற தலித்துகளும் பொதுப்பெயரில் இந்திய அடையாளமிட்டுக் கொள்கிறார்கள் என்று கருதஇடம் இருக்கிறது.

பார்ப்பனர் மற்றும் தலித்து வகுப்பினர் இப்படி நினைக்கிறார்களே பிறர் அப்படி நினைக்கவில்லையே ஏன் என்று
யாரும் கேட்கலாம். அவர்களுக்கு வேறெங்கேயும் யாருடனும் ஒட்டு இல்லை. அப்படி இருந்திருந்தால் கவுண்டன் எப்பவோ சிறீகவுண்டன் ஆகியிருப்பான். முதலி எப்பவோ முதலிசிறீ ஆகியிருப்பான். வடமொழி மோகம் என்பது மேட்டுக்குடியின் அடையாளம். அதற்குப் பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. வையாபுரிப்பிள்ளைக்குத் தோதாக ஒரு சாதி வடக்கே இருந்திருந்தால் தன் சாதிப்பெயரை பிள்ளைவாள் எப்பொழுதோ மாற்றிக் கொண்டிருப்பார்.

2) திராவிட இயக்கங்களின் எழுச்சி பார்ப்பன சாதியை வைவதிலேயே தொடங்கியது. அப்படிச் செய்ததில்
இரண்டு நோக்கங்களை அது கொண்டிருந்ததது என்று கருத இடம் இருக்கிறது. ஒன்று, பார்ப்பனர்கள் செய்த மேலாதிக்கத்தையும், அவர்கள் ஒழுகிய/ஒழுகுகின்ற வைதீகத்தின் வருணம், தீண்டாமை உள்ளிட்ட குமுகச் சமனுக்கு ஒவ்வாத சங்கதிகளையும் மறுப்பதற்காக அவர்களின் சாதியைச் சொல்லி வைததாகவே காணக்கிடைக்கிறது.

மற்றொன்று, பார்ப்பனர்களுடன் ஆன பங்காளித்துவ போரில், பார்ப்பனரல்லாதவர்களை ஒன்று சேர்ப்பதற்காக
நடத்தப்பட்ட நாடகமே "பார்ப்பனன் என்று சாதியைச் சொல்லி வைதது" என்று வலுவாகச் சொல்லமுடிகிறது. ஏனென்றால், வைதீக வருணத்தையும், மேட்டுக்குடித் தனத்தையும் காட்டியவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல. சாதித்தமிழர்கள் என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த மேட்டுக்குடியானவர்களும் வைதீக வருண, தீண்டாமையின் பங்காளிகள்தான். பார்ப்பனர் மட்டும் இந்தக் கொடுமையைச் செய்யவில்லை. சொல்லப்போனால் பார்ப்பனரை விட பல மடங்கு அதிகமாகச் செய்தவர்கள் இந்த மேட்டுக் குடியானவர்கள்தான். அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்வேன்: பார்ப்பன சாதியை இகழ்ந்து ஏடுகளிலும் நேரடியாகவும் எங்கும் பேசமுடிகிறது (இதற்குத் தமிழ்ப்பற்று என்று வேறு பெயர் வைத்து விட்டது கேவலமான ஒன்று). ஆனால், பார்ப்பனரல்லாத எந்தச் சாதியினரையும் சாதியைச் சொல்லி இகழ்ந்து பேசிவிடமுடியாது. அப்படிச் செய்தால் தமிழ்நாடு பற்றி எரியும். எரிந்திருக்கிறது. அதைக் கண்டித்துக் கொண்டே அதுவும் பார்ப்பானின் சூழ்ச்சி என்று திராவிட இயக்கங்கள் பொய் பேசின; சாதித்தமிழர்களை அவர்களின் அழுக்கு வெளியே தெரியாமல் அரணாக இருந்தன. 

ஆக, பெருந்தீங்கு செய்த பல குடியானச் சாதிகள் தாம் செய்த அடாவடிகளை அட்டூழியங்களை மறைக்க அத்தனை அடாவடிகளையும் பார்ப்பனச் சாதியின் மேல் மட்டும் பழி போட்டுக் கூட்டுக் கொள்ளையடித்திருக்கின்றன தமிழ்நாட்டில் என்று வலுவாக நம்ப இடம் இருக்கிறது. 
திராவிட மோசடி என்பது இதுதான். 

இதனால் பார்ப்பனர் என்ற சொல் அவமாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். பள்ளர் பறையர் என்று இளக்காரமாக மேட்டுக்குடியினர் பேசியதால் ஏற்பட்ட அவத்தைப் போக்கவே தலித்து என்று அழைத்துக் கொள்கின்றனர் என்று
சிலர் சொல்வதுண்டு. அது போலவே பார்ப்பனர் என்ற சொல் அவமாகப் பார்க்கப் படுகின்றது என்று சொல்ல
இடமுண்டு.

திராவிடக் கட்சிகள் நேர்மையானதாக இருந்திருந்தால் பார்ப்பனரல்லாதார் செய்யும் அடாவடிகளையும்
கண்டித்திருக்கும். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக ஒன்றுபட வேண்டும் ஒன்றுபடவேண்டும்
என்று சொல்லியே அனைவரையும் பிரித்து வைத்திருக்கிறது கடந்த 50 ஆண்டுகளில். ஞாயமாக,
திராவிட இயக்கங்கள் நேர்மையாக இருந்திருந்தால் தலித்து இயக்கங்களோ அல்லது வன்னியர், முக்குலத்தோர்,
நாடார், கொங்கர் அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டியிருக்காது. அதேபோல இந்தியாவை ஆளுகின்ற காங்கிரசு இயக்கம் நேர்மையானதா என்றால் அது 100 திராவிடங்களுக்குச் சமம் :)

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

  1. நீங்கள் கட்டுரையை தொடங்கிய தொணி வேறு முடிவில் வேறாக தெரிகிறது... இன்னும் விளக்கமாக பேசியிருக்கலாம். உங்கள் கட்டுரையின் நோக்கம் திராவிட இயக்கங்களை திட்டுவதுதானோ!

    ReplyDelete
  2. தமிழ் நாட்டின் கோனார்கள் சமீப காலங்களில் யாதவர் ஆன விஷயம் உங்களுக்குத் தெரியாதோ?

    ReplyDelete