Wednesday, April 10, 2013

ரவிக்குமார் கவிதை

 
 
எலி வளைகளிலும்
தானியம் அற்றுப்போன கோடையெனக்
கழிகிறது காலம்
குழந்தைகள் பூனைகளைப் போல சிரிக்கிறார்கள் 
வானம் சாம்பலாய்ப் பொழிகிறது

குருதிக் கறை  படிந்த கைகளைக் குலுக்குவதே
நட்பாகிவிட்டது
வஞ்சகத்தைத் தியாகமென்றும்
நபும்சகத்தை மதியூகமென்றும்
அழைக்கப் பழகிவிட்டோம்
கருணை இப்போது கிழங்குவகையாகவும் இல்லை

நாம் கேட்கிறோம்
நீதி
கொல்லப்பட்டவர்களுக்காக
பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்காக
அங்ககீனம் செய்யப்பட குழந்தைகளுக்காக
நாடற்றுத் திரியும் அகதிகளுக்காக 

நமது பேச்சில் தெறிக்கிறது
தாய்,சகோதரி, இனம், ரத்தம்,
உரிமை,துரோகம்,வீரம், வரலாறு . . .
நாம் கேட்கிறோம்
நீதி

சக மனிதனின் வாயில்
மூத்திரம் பெய்தபடி

No comments:

Post a Comment