Wednesday, August 24, 2011

அண்ணா அசாரே : சாதியை ஒழிப்பதற்காக ஒரு சாதாரண ஆத்மாவோ அல்லது மகாத்மாவோ இருக்கிறர்களா?





24.8.2011 அன்று புதுதில்லியில் இந்திய தலைமை அமைச்சர் இல்லத்தில்  லோக்பால் மசோதா தொடர்பாகநடைபெற்ற நாடாளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை:

மாண்புமிகு தலைமை அமைச்சர் அவர்களே, அனைத்துக் கட்சித் தலைவர்களே வணக்கம்
இந்த அரிய வாய்ப்புக்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அண்ணா  அசாரே குழுவினரின் போராட்டத்தைஅரசு எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரப்போகிறது என்பது தான் தற்போதைய முதன்மையான சிக்கலாக உள்ளது.பொதுமக்களின் பேராதரவுடன் அவர்களின்  போராட்டம் நாளுக்குநாள் வலுப் பெற்றுவருகிறது.இன்றைய நிலையில் அரசுக்கு இதுவே மிகப்பெரும் சவாலாக உள்ளது.

நமது நாட்டில் வறுமை,ஊழல்,பயங்கரவாதம்,மற்றும் சாதி,மதம்,ஆகியவற்றின் பெயரால் நடக்கும் ஓரவஞ்சனைகள் போன்ற தீர்வு காணப்படவேண்டிய  எரியும்  பிரச்சனைகள் ஏராளமாக  உள்ளன என்பதனை நாம் அறிவோம் .குறிப்பாக தலித் மக்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் அனைத்து வகையிலுமான வன்கொடுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதனைத்  தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ள யாரும் முன்வரத் தயாராக இல்லை .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  மேலாக இத்தகைய ஓரவஞ்சனைகள்,வன்கொடுமைகள்,தலித் மக்களுக்கும்,பிற உழைக்கும் மக்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நாட்டில் சாதியை ஒழிப்பதற்காக யாரேனும் ஒரு சாதாரண ஆத்மாவோ அல்லது மகாத்மாவோ இருக்கிறர்களா? எனினும் ,தற்போது ஊழலை ஒழிப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.ஆனால் ,நாடாளுமன்ற அவைக்கு ஆணையிடும் வகையில் நடந்துகொள்ளும் முறை ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்திற்கான உச்சநிலை அதிகாரம் அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் .எனவே அண்ணா   அசாரேவின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலுவானதொரு முடிவை எடுக்கவேண்டுமென அரசை கேட்டுக் கொள்கிறேன்.மக்களின் பிரதிநிதிகளே இத்தகைய பிரச்சனைகளை இறுதி செய்ய வேண்டும். அதுவே  பிரதிநிதித்துவ சனநாயகமாகும் .மாறாக அரசு இத்தகைய நடைமுறைகளை ஊக்கபடுத்தினால் அது இந்திய அரசியலமைப்புச்  சட்டத்திற்கும், சனநாயகத்திற்கும் ,அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை .புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் செய்கிற அவமதிப்பாகவே  அமையும் .

நிறைவாக, அண்ணா   அசாரே குழுவினரின் கோரிக்கைகள் எளிதில் புறந்தள்ளக்கூடியவை அல்ல என்பதைச்  சொல்ல விரும்புகிறேன்.நாடாளுமன்றத்தின் உச்சநிலை அதிகாரம் நீர்த்துப்போகாத வகையில் அவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க  வேண்டும். நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட லோக்பால் மசோதாவை திரும்பப்  பெறவேண்டிய தேவையில்லை .ஆனால் அம்மசோதாவை வலுவுள்ளதாகவும் , பயனுள்ளதாகவும் அமையக்கூடிய வகையில் நீக்கல் மற்றும் சேர்த்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் .நன்றி !.

1 comment:

  1. அண்ணா அசாரேயின் குடியரணி (லோக்பால்) முன்னெடுப்புகளில், உள்ள அச்சங்களைப் பல சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
    குறிப்பாக 1) குடியரணி (அல்லது குடிமீளி அல்லது குடிக்கா) அமைப்புகள் நாடாளுமன்றக் குடியமைப்புக்கான சவால் ஆகிவிடும் 2) குடியரணியே பெரும் ஊழல் அமைப்பாக மாறிவிடும்
    என்ற கருத்துக்களில் உள்ள உண்மையைப் புறந்தள்ள முடியாது. ஆயினும் நான் முழுமனதோடு இந்தக் குடியரணியை வரவேற்கிறேன். ( நாடாளுமன்றத்திற்குச் சவாலாக அமைத்தாலும் )

    அடித்தளத்தில் உள்ள கிராமப்புற கூட்டுறவு அமைப்புகளில் இருந்து உச்ச நயமன்றம் வரை குடியரசின் அமைப்புகள்தான். அதில் எந்த ஒரு அமைப்பும் அறைபோகாமல் இல்லை என்பது உண்மை. இந்த நிலையில், குடியரணிக்கு மக்களிடையே காணப்படும் வரவேற்பு குடியரசின் எல்லா அமைப்புகளிலும் அவர்களுக்கேற்பட்டிருக்கும் பெருத்த ஏமாற்றத்தையே வெளிக்காட்டுகிறது. ஆகவே, அறைபோவோர்களிடம் இருந்து குடிகளை அரண் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
    இந்தக் கட்டாயமே குடியரசை ஏகத்துக்கும் குலைத்திருப்பதை வெளிக்காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குடியரணியை ஆதரிப்பது 1) வலுவான சாட்டை ஒன்று அறைபோகும் நிலைக்கு எதிராக ஏற்படவேண்டும் என்பதே
    2) அண்ணா தரப்பும், அரசு தரபபும் தம் எல்லைகளில் இருந்து இறங்கி ஏறி வருவார்கள். அது ஒரு வரைவைக் கொண்டுவரும்.
    3) அப்படியே இல்லாமல் அண்ணாவின் வரைவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் அதனை ஒரு கால வரைக்குட்பட்டுக் கொண்டு வரலாம். அதாவது 5 ஆண்டுகளில் மீள்பார்வை இட்டு இதன் போக்கு சரியில்லை என்றால் இதே மக்கள் ஆதரவோடு கலைத்துவிடலாம். நல்லதை எண்ணி ஆதரிக்கும் மக்கள் கெட்டது கண்டால் புறக்கணிப்பார்கள் என்பதும் உண்மையல்லவா?

    ஆகவே, இப்போது ஒரு சாட்டை தேவை. இதனைக் கண்டு குடியரசுப் பார்வையில் நான் ஏன் அஞ்சவில்லை என்றால், அடிப்படையில் இது, "தெரு/ஊரில் திருடர்கள் பயமென்றால் மக்கள ஒன்று கூடி இரவில் தினம் 2/3 பேர்கள் தடியைத் தூக்கிக் கொண்டு ஊர்க்காவல் இருப்பதைப் போன்றதுதான்". காவற்துறை, உள்ளூராட்சி, போன்ற அமைப்புகளுக்கு எதிரானதுதான் உள்ளூர் மக்கள் தன் கிராமத்தை அல்லது தெருவை தடியெடுத்துக் கொண்டு காவல் இருப்பதும். அதனை ஏற்றுக் கொள்ளும்போது இதனை ஏற்றுக் கொள்வதற்கு அஞ்சத் தேவையில்லை என்றே நம்புகிறேன்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete