Friday, September 30, 2011

முனைவர் சோ.ந.கந்தசாமி



அறிஞர் சோ.ந.கந்தசாமி எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கிலம் வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் அவர்கள் 15.12.1936ல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் வை.சோ.நடராச முதலியார், மீனாம்பாள் அம்மாள். கந்தசாமியார் அவர்கள் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை- பொருளாதாரம் பயின்றவர்.

சோ.ந.கந்தசாமியார் அவர்கள் முதுகலைத் தமிழ் இலக்கியம் தண்ணார் தமிழளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1958). எம்.லிட் (1963), முனைவர் (1971) பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர்கள்.

தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்து நடத்தினார். பின்னர் மலேசியாப் பல்கலைக்கழகத்திலும் (1979-85) தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியை அழுத்தமாகச் செய்தவர். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர்.

சோ.ந. கந்தசாமியார் அவர்கள் நாற்பதாண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ளார். இவரிடம் கற்றவர்களும், இவருடன் கற்றவர்களும் இவர் கல்வி கண்டு மருள்வது உண்டு. நினைவாற்றலில் வல்லவர். எடுத்துரைப்பதில் ஆற்றலாளர். மேடையை, வகுப்பறையத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியான பேச்சாற்றல் வல்லவர். எதுகைகளும்,மோனைகளும் இவர் பேச்சில் சிந்திச் சிதறும்.

'அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம்' என்றும், 'எங்கள் மனசைக் கவர்ந்த பனசைக் கல்லூரி' என்றும் இவர் விளிக்கும் பாங்கு கற்றவர்களால் என்றும் நினைவுகூரத்தக்கன. இத்திறம் கண்ட கற்றார் களிப்புறுவர். இவர் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்த மேலோர். நூலோர்.

கந்தசாமியார் அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர். கந்தசாமியார் அவர்களுக்கு ஆண்மகன் ஒருவரும், பெண்மக்கள் நால்வரும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்று நல்ல நிலையில் உள்ளனர்.

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் வகுப்பறையில் மட்டும் புலமை புலப்படும்படி விளங்கினார் என்று இல்லை. இவர் இயற்றிய நூல்களும் என்றும் பயன்படுத்தத் தக்கன. தரத்தன. இவர் இந்து நாளிதழில் முப்பத்தந்து ஆண்டுகளாக எழுதும் நூல் மதிப்புரைகள் அறிஞர் உலகால் என்றும் போற்றி மதிக்கப்படுவனவாகும்.

இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கிப் பார்க்கலாம்.

இலக்கிய நூல்கள்:

1.சங்க இலக்கியத்தில் மதுரை
2.திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
3.இலக்கியமும் இலக்கிய வகையும்
4.தமிழிலக்கியச் செல்வம் (ஐந்து தொகுதிகள்)
5.திருமுறை இலக்கியம்
6.திருமுறையில் இலக்கிய வகை
7.உலகத் தமிழிலக்கிய வரலாறு (கி.பி.501-கி.பி.900)
8.மணிமேகலையின் காலம்
9.பரிபாடலின் காலம்
10.இலக்கியச்சோலையிலே

திறனாய்வு:

11.Bharathidasan As a Romantic Poet
12.Anthology of Book Reviews
13.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

மொழிபெயர்ப்பு:

14.English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
15.Volume II (patikam 51-100) (Total 1026 verses)
16.16.திருமந்திரம் எட்டாம் தந்திரம் English Translation of Tirumantiram (Total 527 verses)

இலக்கணம்:

17.தமிழிலக்கணச் செல்வம் (இரு தொகுதிகள்)
18.தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு
19.புறத்திணை வாழ்வியல்
20.தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் (மூன்று தொகுதிகள்)
21.கலித்தொகை யாப்பியல்

மொழியியல்:

22. A Linguistics Study of Paripatal (M.Lit.Thesis)
23.A Linguistis of Manimekalai

தத்துவம்:

24.தமிழும் தத்துவமும்
25.தமிழிலக்கியத்தில் பௌத்தம்
26.தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
27.இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)
28.Budhism As Expounded in Manimekalai (Ph.D. Dissertation)
29.Indian Epistemology as Expounded in the Tamil Classics
30.Tamil Literature and Indian Philosophy
31.The Yoga of Siddha Avvai (Published in Canada)
32.Advaitic Works and Thought in Tamil
33.The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அமையாமல் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழ ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார்.இந்திய நடுவண் தேர்வாணையத்தின் (U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர். திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவர்தம் நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவர் அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருது பெற்ற பெருமைக்கு உரியவர். தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி, குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர், திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி, மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் தன் தகுதியால் பெற்றுள்ளார்.

அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும்,எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அவர்கள் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.

சோ.ந.கந்தசாமியார் அவர்களின் தொடர்பு முகவரி:

முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்
61,ஐந்தாம் தெரு,
நடராசபுரம்(தெற்கு).
தஞ்சாவூர் - 613007
தொலைபேசி : 04362 241027

கட்டுரை ஆக்கம் : முனைவர் மு.இளங்கோவன் 

2 comments:

  1. நான் தஞ்சையில் பணியாற்றியபோது நண்பருடன் பெரியவர் கந்தசாமி அவர்களை நண்பருடன் அவர் வீட்டில் சந்தித்திருக்கிறேன். அந்த அறிஞரின் மிக அன்பான பேச்சும் விருந்தோம்பலும் பிறர்பால் காட்டும் மதிப்பும் அம்மாவின் கனிவும் என்னைக் கவர்ந்தன. திருக்குறள் உறுதிப்பொருள்கள் நூலும் கட்டுரைத்தொகுதியும் கொடுத்து வழியுப்பினார். எனது துறை சார்ந்து எழுத ஊக்கினார். புத்தமதம், சைவம் பற்றிய அவரது ஆய்வுகளும் தொய்வு இன்றிப் பணியாற்றலும் அவரது சிறப்பியல்கள்.
    நான்காண்டுகளுக்குப்பின் திரு இரவிக்குமார், திரு இளங்கோவன் அவர்களால் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டேன். நினைவுகூர்ந்து அதே அன்புடன் உரையாற்றினார். இணையத்தில் வந்துள்ள கட்டுரை பற்றிப் பெரு மகிழ்ச்சியுடன் விசாரித்து அறிந்துகொண்டார். அவர் தொடர்ந்து ஆற்றும்பணி பற்றியும் பகிர்ந்துகொண்டார். பிள்ளைகள் நலம் பற்றி விசாரித்தார்.
    மனதிற்கு மிக நிறைவாக இருந்தது.
    நண்பர்கள் திருவாளார்கள் இரவிக்குமார், இளங்கோவன், ழான், செல்வா, இளன்கோவனுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    ReplyDelete
  2. அன்புள்ள இரவிக்குமார்,

    மிக்க நன்றி. அது முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் படைப்பு.
    அவர் ஒப்புதலில் பேரிலேயே அதனை ஒட்டியே
    தமிழ் விக்கிப்பீடியாவிலும் எழுதியுள்ளார்கள். அன்புடன் இங்கும்
    இட்டதற்கு மிக்க நன்றி.

    அன்புள்ள வினைதீர்த்தான்,

    உங்கள் பகிர்வு, மிக மிக அருமையானது.
    உங்கள் அனுபவத்தை
    அருள்கூர்ந்து தக்கவாறு பதிவு செய்யுங்கள்.
    இவை வரலாறு! இனி வருவோருக்கும்
    பயன் பெருகுமாறு இவை
    அமைய வழி வகுக்கும்!
    என் அன்பான வணக்கங்களையும் தெரிவியுங்கள்.
    இயன்றதைப் பதிவும் செய்யுங்கள்

    மிக்க நன்றி!

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete