Monday, December 1, 2014

இந்தி எதிர்ப்புப் போராட்டமும் பொன்விழாகாணும் புறக்கணிப்பு அரசியலும் -ரவிக்குமார்



1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் 2015 இல் பொன்விழா காண்கிறது. அதற்கு முன்பு நடந்த மொழிப் போராட்டங்களைக்காட்டிலும் 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறதென்றால் அது தி.மு.க ஆட்சிக்கு வந்ததைத்தான் சொல்லவேண்டும். 

1965 சனவரி 25 முதல் மார்ச் 15 வரையில் ஐம்பது நாள்கள் தொடர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எழுபது பேர் இறந்ததாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.  இதில் ஆறு பேர் தீக்குளித்து இறந்தனர். இரண்டு பேர் விஷம் அருந்தி உயிர் நீத்தனர்.  ஒரு மாதத்துக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் பாதுகாப்பு, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது, 

1965 போராட்டம் ஜனவரி 25 இல் ஆரம்பித்ததால் அதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக தி.மு.கவும் பிற திராவிடக் கட்சிகளும் கடைபிடித்து வருகின்றன. எல்லாவற்றிலும் தி.மு.கவை எதிர்க்கும் அதிமுகவும் அதே நாளைத்தான் வீரவணக்க நாளாகக் கடைபிடிக்கிறது. இப்படிக் கடைபிடிப்பதைத் தவறு எனக் கூறமுடியாது. ஆனால் ஜனவரி 25 ஐ வீரவணக்க நாளாக அறிவித்ததில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது. 1965 க்கு முன்னர் நடைபெற்ற போராட்டங்கள் முக்கியத்துவத்தை இழந்தன. அதுமட்டுமின்றி இந்தி எதிர்ப்புப் போரில் முதல் களப்பலியான நடராசனின் தியாகம் புறக்கணிக்கப்பட்டது. 

சென்னை - சௌகார்பேட்டையிலிருந்த இந்து தியலாஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு 1938 டிசம்பர் 5ஆம் தேதி இந்தித் திணிப்பை எதிர்த்து மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டார் நடராசன்.  அவருக்கு ஏழரை மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.  சிறையிலிருந்தபோது கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட காரணத்தால் 30ஆம் தேதி அவர் சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.  1939 ஜனவரி 15ஆம் தேதி அவர் உயிர் நீத்தார். 

மொழிப்போரில் ஈடுபட்டு ஒரு கைதியாகவே நடராசன் மரணமடைந்தார்.  அவர் இயற்கையாக மரணமடைந்ததாகத் தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.  18-1-1939 இல் நடராசனின் மரணம் குறித்து விளக்கமளித்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜாஜி “நடராசன் படிப்பறிவு இல்லாதவர்.  அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார்.  அவரைப் போலப் படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” எனக் கூறினார்.  ராஜாஜியின் பேச்சுக்குக் கடுமையான கண்டனம் எழுந்தது.  நடராசனின் தந்தையார் ராஜாஜியின் கூற்றை மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

நடராசனை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு “மறியலில் ஈடுபட்டதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம்“ என அரசு அதிகாரிகள் அவரிடம் வற்புறுத்தியுள்ளனர்.  ஆனால் “கோழையாக வாழ்வதைவிட வீரனாகச் சாவதையே நான் விரும்புகிறேன்” என நடராசன் கூறியுள்ளார்.  அப்படியே வீர மரணமும் எய்திவிட்டார்.

மொழிப்போரில் முதல் களப்பலியானவர் நடராசன் தான். ஆனால் அவரது உயிர்த் தியாகம் மதிக்கப்படவில்லை. அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் அதற்குக் காரணமா என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் அவரது பெயரை உச்சரிக்கும்போதுகூட முதலில் சொல்லாமல் தாளமுத்துவின் பெயருக்கு அடுத்ததாகச் சொல்வதே தமிழக அரசியல் கட்சிகளின் வழக்கமாக இருக்கிறது.

நடராசன் உயிர்நீத்த சனவரி 15 ஆம் தேதியை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாகக் கடைபிடிப்பதே இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை நேர்செய்வதாக இருக்கும். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் பொன்விழா காணும் இந்த நேரத்திலாவது அப்போதிலிருந்து தொடரும் இந்த இருட்டடிப்பும் புறக்கணிப்பும் நீக்கப்படவேண்டும். தமிழர் ஒற்றுமையில் உண்மையான அக்கறைகொண்டவர்கள் அதற்கு முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment