Tuesday, December 25, 2012

கடலூர் மாவட்டத்தில் இன்னுமொரு தலித் பெண் மரணம்




பெண்கள்மீதான தாக்குதல் குறித்து நாடெங்கும் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பட்டு வரும் நிலையில் அண்மைக்காலமாக கடலூர் மாவட்டத்தில் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவருகிறது. கல்லூரி மாணவி பிரியா கடலூருக்கு அருகில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். குணமக்கலத்தைச் சேர்ந்த தலித் பெண் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். நேற்று ( 25.12.2012 ) சிதம்பரம் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மேலவீதியில் சந்தியா என்ற தலித் பெண் சந்தேகமான முறையில் இறந்திருக்கிறார்.

சிதம்பரம் மேலவீதியில் உள்ள அபிநயா என்ற போட்டோ ஸ்டுடியோவில் வேலைசெய்துவந்த சந்தியா நேற்று காலை 11 மணியளவில் அந்த ஸ்டுடியோ இருக்கும் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. கீழே ஆட்டோ ஸ்டேண்ட் இருக்கிறது, அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தியாவின் மரணம் எப்படி நேரிட்டது என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் ஏன் மொட்டை மாடிக்குப் போனார்? அங்கிருந்து தானாகவே குதித்தாரா அல்லது அங்கிருந்து கீழே வீசப்பட்டாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சந்தியாவை ஸ்டுடியோவின் சொந்தக்காரர் விஜயகுமார் சிம் கார்டு வாங்கிவரச் சொன்னதாகவும் அவர் வாங்கிவந்ததை மாற்றி வாங்கிவரச் சொன்னதாகவும் அவர் மறுத்ததால் திட்டியதாகவும் அதனால் மனமுடைந்த சந்தியா மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஸ்டுடியோ உரிமையாளர் சொல்வதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தியாவின் பெற்றோரோ தமது மகள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டுடியோவுக்கு எதிரில் மின்சார கம்பிகள் செல்கின்றன. அந்தப் பெண் இரண்டாவது மாடியிலிருந்து குதித்திருந்தால் அந்தக் கம்பிகள் மீதுதான் விழுந்திருக்கவேண்டும். ஆனால் அவர் நேரடியாக தரையில் விழுந்தது எப்படியென்று தெரியவில்லை என ஊடகவியலாளர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.

காவல்துறை இதை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் இது கொலையா இல்லையா என உறுதிப்படுத்த முடியும் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சந்தியாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைதுசெய்யவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் 25.12.2012 அன்று மாலை நடத்தப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment