Tuesday, December 25, 2012

கடலூர் மாவட்டத்தில் தலித் பெண் கற்பழிப்பு

கடலூர் மாவட்டத்தில் குணமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது தலித் பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார். தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் உறவுக்கார இளைஞரோடு இரவு ஏழரை மணி அளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்துக்கு அருகில் மணிமுத்தாறில் பேசிக்கொண்டிருந்தபோது  அங்கு வந்த கும்பல் அந்தப் பெண்ணின் துப்பட்டாவால் அந்த இளைஞரைக் கட்டிப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறது . 

அவர்களிடமிருந்து மீண்டு வந்த அப் பெண் சப்தம் போட்டதைக் கேட்டு காவல் துறையினர் வந்து விசாரித்து அழைத்துச் சென்றுள்ளனர். இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடலூரில் சிகிச்சை அளிக்காமல் ஏன் விழுப்புரம் அனுப்பினார்கள் என்ற கேள்வியை எழுப்பும் பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தை மூடிமறைக்க  முயற்சி நடக்கிறதா என்று ஐயம் எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்தான் கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன.86 கற்பழிப்புகள் நடந்திருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. கடலூர் மாவட்டம் என்பது பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  அவ்வளவு அதிகம் இல்லாத மாவட்டம் என்றாலும் அண்மைக்காலமாக தலித் பெண்கள்மீதான பாலியல் கொடுமைகள் இம்மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் , கல்லூரி மாணவி பிரியா கடலூருக்கு அருகில் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டிருந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

No comments:

Post a Comment