Tuesday, December 1, 2015

2005 ஆம் ஆண்டு பெய்த மழையில் தமிழக அரசு கற்ற பாடம் என்ன? -ரவிக்குமார்



2005 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஆரம்பித்து டிசம்பர் முதல் வாரம் வரை நான்கு கட்டங்களாகப் பெய்த கடும் மழையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. அந்த மழை வெள்ளத்தில் 497 பேர் உயிரிழந்தனர். 1520 கால்நடைகள் இறந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 62 பேர் உயிரிழந்தனர். 

2005 ஆம் ஆண்டு மழை வெள்ளத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னைதான். வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையில் 753.1 மிமீ மழை பெய்யவேண்டும். ஆனால் அந்த ஆண்டில்  சென்னையில் 1984.5 மிமீ மழை பெய்தது. அது 164% அதிகமாகும். அக்டோபர் மாதம் 27,28 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 436.90 மிமீ மழை பெய்தது. 

அன்றைக்கு ஆட்சியிலிருந்த அதிமுக அரசு அப்போது மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசிடம் 13684.16 கோடி ரூபாய் நிதி உதவி கேட்டது. 2.58 லட்சம் டன் அரிசியும் 43200 கிலோ லிட்டர் மண்ணெணையும் கேட்டது. 

மத்திய அரசோ முதல் தவணையாக 500 கோடி அடுத்து 500 கோடி அதன்பின்னர் 808.35 கோடி என மொத்தமாக 1808.35 கோடி நிவாரணம் வழங்கியது. அத்துடன் 2.44 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் 21 ஆயிரம் கிலோலிட்டர் மண்ணெண்ணையும் வழங்கப்பட்டது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சரும் நிதி அமைச்சரும் ஹெலிகாப்டரில் உடனடியாகப் பார்வையிட்டனர். மத்திய அரசின் அதிகாரிகளைக் கொண்ட குழு இரண்டுமுறை வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தது. 

2005 ஆண்டில் பெய்த மழையைவிட இப்போது சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் மழை அதிகம்தான். இன்னும் எத்தனை கட்டங்களாக மழை பொழியும் என்பதை நாம் இப்போது சொல்ல முடியாது. ஆனால் 2005 ஆம் ஆண்டைப்போல இந்த ஆண்டு மழையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்படவில்லை. 

2005 ஆம் ஆண்டு மழை வெள்ள அனுபவத்திலிருந்து தமிழக அரசு ஏதாவது கற்றுக்கொண்டதா? அதை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததா? தத்தளிக்கும் சென்னையையும் பிற மாவட்டங்களையும் பார்க்கும் மக்களே அதை முடிவுசெய்துகொள்ளட்டும். 

( இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் தமிழக அரசு வெளியிட்ட Annual Report on Natural Calamities 2005-2006 என்ற அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை) 

No comments:

Post a Comment