Wednesday, December 30, 2015

ஆண்டின் மரணம் - ரவிக்குமார்



செத்துக்கொண்டிருக்கிறது 
ஒரு ஆண்டு
மணி மணியாக
நொடி நொடியாக 
 
காலத்தைத் தடுத்து நிறுத்தினாலன்றி 
காப்பாற்ற முடியாதெனக்
கைவிரித்துவிட்டார்கள் 

செத்துக்கொண்டிருக்கிறது .... 
கைவிடப்பட்ட ஒரு மூதாட்டியைப்போல
நொடி நொடியாக 

அஸ்தமிக்கும் ஆண்டினருகில் அமர்ந்திருக்கிறேன்
மரணத்தைவிடக் கொடுமையாயிருக்கிறது
உயிர் அடங்குவதைக்
கவனித்துக்கொண்டிருப்பது 

நினைவுகூர்ந்து மகிழ்ச்சியடைய 
எதுவுமில்லை. எல்லாம் துயரம். 

' என் புத்திரர்களைக் கொன்றுவிட்டார்கள்! 
செம்மரக் காட்டில் கட்டிவைத்து சுட்டார்கள்; 
என் மூத்த மகனைக் கொன்றார்கள்
வீட்டுவாசலில் 
நெற்றியில் சுட்டார்கள்; 
மாட்டின்பெயரால் ஒரு மகனைக் கொன்றார்கள்' 

' என் புதல்வியரைக் கொலைசெய்தார்கள் 
இரவில் பகலில் வீட்டில் சாலையில் 
ஓடும் பேருந்தில் ஒதுக்குப்புற கட்டிடத்தில்' 

' எத்தனை பிணங்கள் எத்தனை பிணங்கள்' 
ஆண்டின் வாய் 
தானே அரற்றியது

'இறுதி விருப்பத்தைச் சொல்' எனக் கேட்டேன்
கசியும் விழிகளால் 
சுவரைத் துழாவியது  

அருகில் சென்றேன், 
வண்ணத்துப் பூச்சிகளோடு சிரித்துக்கொண்டிருக்கும்
சிறுமியின் ஓவியம்
அருகில் - 
விருது ஒன்றைத் தாங்கியிருந்த
சட்டகத்தைக் 
கழற்றிய வெற்றிடம்

1 comment: