Thursday, December 31, 2015

நிராசை - ரவிக்குமார்

  

ஆசையாகத்தான் இருக்கிறது

இன்னொரு வீடு எரிக்கப்படாது
இன்னொரு கழுத்து அறுக்கப்படாது
இன்னொரு மானம் பறிக்கப்படாது 
இன்னொரு பாதை மறுக்கப்படாது
இன்னொரு கதவு மூடப்படாது
இன்னொரு வாய்ப்பு பறிக்கப்படாது
எனச் சொல்ல 

ஆசையாகத்தான் இருக்கிறது

எல்லோரது குரலும் கேட்கப்படும்
எல்லோரது குறையும் தீர்க்கப்படும்
எல்லோரது காயமும் ஆற்றப்படும் 
எல்லோரது கண்ணீரும் துடைக்கப்படும்
எல்லோரது பேச்சும் மதிக்கப்படும் 
எனச் சொல்ல 

ஆசையாகத்தான் இருக்கிறது 

நிரபராதிகள் இனம் காணப்படுவார்கள்
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்
அயோக்கியர்கள் அகற்றப்படுவார்கள்
நல்லவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்
எனச் சொல்ல 

எனக்கும்
ஆசையாகத்தான் இருக்கிறது 
இந்த வருடத்தைப்போல இருக்காது 
அடுத்த ஆண்டு 
எனச் சொல்ல

No comments:

Post a Comment