Monday, February 16, 2015

ரவிக்குமார் கவிதை



குழந்தையின் படம் ஒன்றை 
கைபேசியில் வைத்துக்கொள்ளுங்கள்
அது உங்கள் குழந்தையின் படமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை
அது சிரித்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதும்கூடத் தேவையில்லை 

கைபேசியின் திரை உயிர்பெறும்போதெல்லாம்
அந்தக்
குழந்தை உங்களைப் பார்க்கட்டும் 

பேசி முடித்து ஃபோனை மூடும்போது
உங்கள் உரையாடல் எவ்வளவு அர்த்தமற்றது
என்பதை அது சொல்லும்
முகநூலில் அலைந்து சோரும்போது 
உங்கள் தேடல் எவ்வளவு வியர்த்தம்
என்பதை அது உணர்த்தும்
 
உங்கள் மனிதத்தன்மையை அது நினைவூட்டும் 
உங்களுக்குள் இருக்கும் 
தந்தையை தாயை அது தட்டி எழுப்பும் 

கைபேசியில் குழந்தையின் படத்தை வைத்திருப்பது
தூங்கும் குழந்தையைத் 
தோளில் சுமந்திருப்பது போன்றது

இப்போதாவது வைத்துக்கொள்ளுங்கள் 
கைபேசியில் 
ஒரு குழந்தையின் படத்தை

No comments:

Post a Comment