Wednesday, February 11, 2015

அசட்டுத்தனமே தர அளவுகோலாகிவிடும்போது .......


இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு மூடப்படுகிறது என்ற அறிவிப்பைப் படித்ததும் மனம் அதிர்ந்தது. இன்றைய வணிக உலகில் இது சாதாரணமானதுதான் என்றபோதிலும் அதை இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. வாஸந்தி ஆசிரியராக இருந்த காலத்திலிருந்து அந்தப் பத்திரிகையோடு ஏற்பட்ட உறவு. ஆனந்தநடராஜன் காலத்திலும் தொடர்ந்தது. பத்திகள் பலவற்றை அதில் எழுதியிருக்கிறேன். உண்மை அறிதல் என்ற எனது சிறுகதை ஒன்றும் அதில் வெளியானது. கட்டுரைகள் மதிப்புரைகள் என பலவற்றை எழுத வாய்ப்பளித்த இதழ். மனத் தடை இல்லாமல் சென்றுவரக்கூடிய பத்திரிகை அலுவலகமாக அது இருந்தது. 

அண்மையில் அதில் கவிதா இணைந்த பின்னர் பெருமாள் முருகன் பிரச்சனை குறித்த சிறப்பிதழைக் கொண்டுவந்தார். அந்த இதழ் தனக்கு மிகவும் நிறைவளித்தது என அவர் கூறியிருந்தார். நானும் அந்த இதழில் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதுவே இந்தியா டுடேவில் நான் எழுதும் கடைசிக் கட்டுரையாக இருக்கும் என அப்போது நினைக்கவில்லை. 

அச்சு ஊடகம் கடுமையான நெருக்கடியை சந்தித்துவருகிறது. இன்னும் பல பத்திரிகைகள், நாளிதழ்கள் மூடப்படலாம். ஊடகத் துறையில் பணிபுரியும் நண்பர்கள் எந்த நேரத்திலும் வேலையை இழக்கலாம் என்ற அச்சத்தோடே வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது துயரம் அதிகரிக்கிறது. 

காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அச்சு ஊடகத்துக்கு மட்டுமல்ல தரமான ஊடகவியலாளர்களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாகிவிட்டன. "அசட்டுத்தனமே தர அளவுகோலாகிவிடும்போது நுண்ணுணர்வுள்ளவர்கள் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது " என காலையில் ஒரு பத்திரிகையாள நண்பர் சொன்னார். எல்லா துறைகளுக்கும் பொருந்தக்கூடிய மகத்தான உண்மை! 

No comments:

Post a Comment