Friday, February 13, 2015

ஆம் ஆத்மி: நவீனத்துவமா பழமைவாதமா? - ரவிக்குமார்



இன்று (14.02.2015) பொறுப்பேற்கும் ஆம் ஆத்மி அரசு சிறப்பாக செயல்பட்டு பிற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வாழ்த்துகிறேன்.

பண்டைக் காலத்தில் தலைநகருக்குக் கூடுதலான முக்கியத்துவம் இருந்தது. போரில் ஒரு தலைநகரைக் கைப்பற்றினால் அந்த நாட்டையே கைப்பற்றியதாக அர்த்தம். இன்று அப்படியில்லை. ஆனால் ஆம் ஆத்மியின் வெற்றியைக் கொண்டாடுபவர்களின் பெருமிதத்தில் அந்தப் பழைய மதிப்பீடு வெளிப்படுவதைக் காண்கிறோம். 

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாத நிலையில் அதன் அதிகாரங்கள் வரம்புக்குட்பட்டவைதான். எனினும் பிற மாநிலங்களுக்கு இல்லாத ஒரு சிறப்புநிலை அதற்கு இருக்கிறது. நாட்டின் உயர் அதிகாரப் பதவிகளை வகிப்பவர்களின் அண்மை. அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவது ஆம் ஆத்மியின் கையில் இருக்கிறது. 

ஆம் ஆத்மி கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்த  வாய்ப்பு இருக்கும் மாநிலம் பஞ்சாப். ஏற்கனவே அங்கே கணிசமான வெற்றியை அது ஈட்டியிருக்கிறது. 

ஆம் ஆத்மியின் பலத்தில் ஒன்று அக்கட்சியிலிருக்கும் பல்வேறுபட்ட அறிவாளிகள். அது பலவீனமாக மாறிவிடாமல் இருக்கவேண்டுமெனில் அகங்காரம் இல்லாத அணுகுமுறையை அவர்கள் மேற்கொள்ளவேண்டும். அக்கட்சியிலிருக்கும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் தமது திறமையை எதிராளிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். ஆனால் அதீதமான சட்டவாதத்துக்குள் கட்சியை மூழ்கடித்துவிடக்கூடாது. 

ஆம் ஆத்மியின் கடந்த காலம் அது இந்தியாவின் சமூக அமைப்பையும் சமூக நிறுவனங்களையும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்தியது. அக்கட்சி பயன்படுத்தும் குறியீடுகள் நவீனத் தன்மை கொண்டவை அல்ல. அற மதிப்பீடுகளை அவற்றின் உள்ளீடு குறித்த புரிதல் இல்லாமல் வலியுறுத்திக்கொண்டிருப்பது வலதுசாரி மனோபாவத்தின் வெளிப்பாடுதான். 

தன்னை சிந்தனையிலும் செயல்பாட்டிலும் நவீனப்படுத்திக்கொள்ள ஆம் ஆத்மி முன்வரவேண்டும். இதன் பொருள் அது ஐரோப்பிய கலாச்சார விழுமியங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது அல்ல. மாறாக ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்பதே. இல்லாவிடில் அது  ஒரு பழமைவாதக் கட்சிதான் என்பது வெகுவிரைவிலேயே அம்பலமாகிவிடும். 

No comments:

Post a Comment