Wednesday, February 25, 2015

விவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் - ரவிக்குமார்



14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானவை பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் தொடர்பான பரிந்துரைகளாகும். பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளக்கவேண்டும்; மின் மோட்டார்கள் அனைத்துக்கும் மீட்டர் பொருத்தவேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பரிந்துரை எண் 84 முதல் 92 வரை அதுகுறித்துப் பேசப்பட்டிருக்கிறது. மின்சார நுகர்வு அனைத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு உலை வைப்பதுதவிர வேறல்ல. 

குடிதண்ணீர் மட்டுமின்றி பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்குள் மீட்டர் பொருத்தவேண்டும். குடிப்பதற்கும், பாசனத்துக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் தண்ணீர் அனைத்துக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு சுயேச்சையான அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் என அது பரிந்துரை செய்திருக்கிறது. 

இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான திருத்த மசோதாவின் அச்சுறுத்தலிலிருந்து விவசாயிகள் விடுபடாத நிலையில் மேலும் அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்தப் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தப் போகிறதா? அல்லது தனது எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்போகிறதா? 

No comments:

Post a Comment