Monday, February 2, 2015

மாதொருபாகன் பிரச்சனை: தேவை பொதுநல வழக்கு குறித்த விவாதம் - ரவிக்குமார்



பெருமாள் முருகன் பிரச்சனையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று தாக்கல்செய்யப்பட்ட பொதுநலவழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சொன்னதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தொடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. ஒரே வாதத்தை முன்வைத்து இப்படி ஆளாளுக்கு நீதிமன்றத்தை நாடுவதைவிடவும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் இணைந்துகொண்டிருக்கலாம். நாங்களும் போராடினோம் எனக் காட்டுவதற்காக எழுத்தாளர்கள் போட்டிக் கூட்டம் நடத்துவதைப்போல நீதிமன்ற வழக்குகளைக் கருதக்கூடாது. 

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள்  இரண்டு முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளனர்:
1. இதைப் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது.
2. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளற முடியாது.
நீதிபதிகள் கூறியிருக்கும் இந்தக் கருத்துகள் சென்னையில் நிலுவையில் இருக்கும் வழக்கை பாதிக்கக்கூடும். 

இந்த வழக்கில் வாதியாக பெருமாள் முருகனை சேர்க்கும்படி சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு ஏற்கனவே கூறியிருக்கிறது. இதைப் பொதுநல வழக்காக  எடுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் அதன் பொருளா என்பது 9 ஆம் தேதி தெரியவரலாம். இது ஒருபுறமிருக்க பொதுநல வழக்குகள் குறித்த வரையறைகள் பற்றிய விவாதத்தின் தேவையை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து உருவாக்கியிருக்கிறது. ஊடகங்கள் அந்த அம்சத்தில் கவனம் செலுத்தினால் நல்லது. 

ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே நியாயம் பெற முடியும். மனித உரிமைக் களத்தில் பல ஆண்டுகள் செயல்பட்ட அனுபவத்திலிருந்து இதை நான் சொல்கிறேன். 


No comments:

Post a Comment