Sunday, February 15, 2015

காங்கிரஸ் ஒரு centrist Party எனக் கூறமுடியுமா? - ரவிக்குமார்


' ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை ஒழிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டது 'என்ற புதியதொரு 'சதி கோட்பாட்டை' காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய்சிங் முன்வைத்திருக்கிறார். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ்காரர்கள்தான். தங்களுக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத ஆதரவு சக்திகளாக இருந்த தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை காங்கிரஸ் இழந்ததற்கு வேறு யாரும் காரணமல்ல தலித்துகளையும் சிறுபான்மையினரையும் கிள்ளுக்கீரையாய் நினைத்து வாயுபசாரத்திலேயே அவர்களை ஏமாற்றிவிடலாம் என காங்கிரஸ் நினைத்ததே காரணம். 

ஐ மு கூ வின் முதல் 5 ஆண்டுகளில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவருவோம் என்றார்கள் 2009 இல் இருநூறு இடங்களை எட்டியதுமே அதைக் காற்றில் பறக்கவிட்டார்கள். சச்சார் குழு அறிக்கையை முழுமையாக நடைமுறைப் படுத்தாமல் கிடப்பில் போட்டார்கள்; தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தர மறுத்தார்கள்; வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதாவை சட்டமாக்காமல் அவசர சட்டமாகக் கொண்டுவந்து காலாவதியாக வழிவகுத்தார்கள். இதே திக்விஜய்சிங் முதல்வராக இருந்தபோது தலித் அறிவுஜீவிகள் கூடி நிறைவேற்றிய போபால் தீர்மானத்தை ஆதரித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்தார்களே ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை? 

சமூக பொருளாதார தளங்களில் பாஜக வெளிப்படையாக செய்வதைத்தான் காங்கிரஸ் மறைமுகமாக செய்துவந்தது. ஆம் ஆத்மியை இமிடேட் செய்ய ராகுல் காந்தி முயற்சித்தார். அதிகாரத்தில் இருந்துகொண்டு எதிர் அதிகாரத்தையும் கைப்பற்ற நினைத்த அவரது பேராசை தோல்வியில் முடிந்தது. அதைப்பற்றி வாய்திறக்காத திக்விஜய் சிங் இப்போது ஆம் ஆத்மி மீது சேறுவாரி வீசுகிறார் . 

ஆம் ஆத்மி ஒரு இடதுசாரி கட்சி அல்ல. அதை ஒரு centrist party என இப்போதைக்குக் கூறலாம். ஆனால் காங்கிரஸை ஒரு centrist party எனக் கூற முடியுமா? ஒரு காலத்தில் இடது சாய்வுகொண்ட centrist party ஆக அது இருந்தது. இன்று அக்கட்சியில் வலதுசாரித் தன்மையே மேலோங்கியிருக்கிறது. காங்கிரஸ் இப்படி உருமாறியதில் ஆர்.எஸ்.எஸ் கை இருக்கிறதா என திக்விஜய் சிங் ஆராய்ந்தால் அந்தக் கட்சிக்கும் நல்லது நாட்டுக்கும்
நல்லது. 

No comments:

Post a Comment