Saturday, February 21, 2015

கர்னாடகா: தலித்துகளுக்குச் செய்த துரோகத்தால் சரியும் காங்கிரஸ் கோட்டை -ரவிக்குமார்


ஒரு காலத்தில் தென் மாநிலங்கள் காங்கிரஸின் கோட்டையாக இருந்தன. ஆனால் இன்று கார்னாடகாவில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதற்குக் காரணம் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரின் உழைப்பு. பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து நிலவிய காலத்தில் மாநிலத்தின் அத்தனை பகுதிகளுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டு வேர்க்கால் மட்டத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தியவர் பரமேஸ்வர். வேளாண் அறிவியலில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கர்னாடகாவின் உயர்கல்வி அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். 2013 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எல்லோராலும் ஏற்கப்பட்டிருந்த நிலையில் அவர் தோற்கடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பரமேஸ்வர் தோற்கடிக்கப்பட்டதால்தான் சீத்தாரமையா முதல்வராக முடிந்தது. 

பரமேஸ்வரின் தோல்விக்குப் பின்னால் சில காங்கிரஸ்காரர்களின் துரோகக் கரங்கள் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் காங்கிரஸில் சேர்ந்திருந்த சீத்தாராமையாவுக்கு பரமேஸ்வரைப் போன்ற தகுதிகள் இல்லை. ஆனாலும் அவர் முதலமைச்சராக்கப்பட்டார். 

பரமேஸ்வரின் உழைப்பாலும் அவரை முன்னிறுத்தியதாலும்தான் காங்கிரஸ் அத்தனை இடங்களை வெல்ல முடிந்தது. அவருக்கு துணை முதல்வர் பொறுப்பாவது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்குத் துரோகம்
இழைத்தது. கர்னாடகாவைச் சேர்ந்த இன்னொரு தலித்தான மல்லிகார்ஜுன கார்கே மாநில அரசியலிலிருந்து அகற்றப்பட்டதோடு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாத மக்களவையில் தலைவராக்கப்பட்டார். பிரதமர் என்றால் ராகுல் காந்தி, படுதோல்வி என்றால் பலியாடாக ஒரு தலித்- இதுதான் காங்கிரஸ் அரசியல். 

மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர் ஆகியோரை  ஏமாற்றிய காங்கிரஸின் துரோகத்தை சகிக்க முடியாமல்தான் இப்போது  தலித் ஒருவரை முதல்வராக்கவேண்டும் என கர்னாடக தலித்துகள் குரலெழுப்புகின்றனர். 

மராட்டியத்தைப் போலவே தலித் அரசியல் எழுச்சியோடு பரவிய மாநிலம் கர்னாடகம். 2011 சென்சஸ் படி அதன் மொத்த மக்கள் தொகை ஆறுகோடியே பதினோரு லட்சம் அதில் தலித்துகள் ஒரு கோடியே ஐந்து லட்சம். மாநிலத்தின் மக்கள் தொகையில் தனிப்பெரும்பான்மையாக இருக்கும் சமூகம் தலித் சமூகம் தான். அந்த சமூகத்தை வஞ்சித்தால் காங்கிரஸின் ஆதரவுக் கோட்டை அங்கும் சரிந்து மண்மேடாகிவிடும். 

No comments:

Post a Comment