Monday, February 16, 2015

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு : 2016 இல் முதல்வர் கனவுகாண தகுதி உள்ள கட்சிகள் எவை? -ரவிக்குமார்



ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே எல்லோருக்கும் தெரிந்ததுதான். தி.மு.க 2011 சட்டமன்றத் தேர்தலில் தான் பெற்ற வாக்குகளையும், பாஜக பத்தாயிரம் வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஐந்தாயிரம் வாக்குகளையும் பெறவேண்டும் என்பதையே இலக்காக வைத்திருந்தார்கள்.அந்தக் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களிடம் பேசியபோது இதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 105328 வாக்குகளையும் திமுக 63480 வாக்குகளையும் பெற்றிருந்தன. பாஜக தனித்துப் போட்டியிட்டு 2017 வாக்குகளை வாங்கியிருந்தது. அந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. தேமுதிக, இடதுசாரிகள்,முஸ்லிம் கட்சிகள்  அதிமுக கூட்டணியில் இருந்தனர். திமுக கூட்டணியில் காங்கிரசும்,பாமகவும் விசிகவும் இருந்தன. 

2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2014 பொதுத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலை அதிமுக தனித்து சந்தித்தது. திமுக கூட்டணியில் விசிக,புதிய தமிழகம், முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றன. பாமக,மதிமுக,தேமுதிக, இஜக ஆகியவை பாஜக கூட்டணியில் இருந்தன. அப்போது திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 103422 வாக்குகளும் திமுக 54410 வாக்குகளும்பெற்றிருந்தன. அதாவது அதிமுகவின் வாக்குகளில் சுமார் இரண்டாயிரம் வாக்குகளும் திமுக வாக்குகளில் சுமார் ஒன்பதாயிரம் வாக்குகளும் சரிந்தன. பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 19347 வாக்குகளைப் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டு 2326 வாக்குகளை வாங்கியது. 

இப்போதைய தேர்தலில் பாஜக 2011 இல் பெற்ற 2017 வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாக வாங்கும்.அந்தத் தேர்தலில் தனித்து நின்று பாரிவேந்தரின் இஜக பெற்ற 1221 வாக்குகளையும் பாஜகவின் வாக்குகளோடு சேர்த்துக்கொண்டால்கூட இந்தத் தேர்தலில் ஆயிரம் வாக்குகளாவது பாஜக கூடுதலாகப் பெறும் எனக் கூறலாம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2014 இல் பெற்ற 2326 வாக்குகளையும்கூட வாங்கும் எனக் கூறமுடியவில்லை. 

இந்தத் தேர்தலில் தனது வேட்பாளரை ஆதரிக்கும்படி திமுக கோரிக்கை விடுத்தபோதிலும் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் தவிர வேறு எந்தக் கட்சியும் அதன் கோரிக்கையை ஏற்கவில்லை. தேமுதிக தனது ஆதரவை பாஜகவுக்கு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் சொல்லவில்லை. மதிமுக,பாமக,காங்கிரஸ்,தமிழ் மாநில காங்கிரஸ்,விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆளும் கட்சியை ஆதரிக்க முடியாது என்றபோதிலும் திமுக வேட்பாளரையும் ஆதரிக்க விரும்பவில்லை என்பதே அந்தக் கட்சிகளின் நிலை.

16 ஆவது சுற்றிலேயே அதிமுக 2011 இல் தான்வாங்கிய 105328 வாக்குகளைக் கடந்துவிட்டது. ஆனால் அந்த சுற்றில் திமுக 39411 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தப் போக்கு தொடர்ந்தால் முடிவு அறிவிக்கப்படும்போது திமுக 2014 பொதுத் தேர்தலின்போது தான் வாங்கிய 54410 வாக்குகளுக்கு அருகே சென்றுவிடும் என்றுதான் தோன்றுகிறது.அப்படி சென்றால் இடைத்தேர்தலின் அனைத்து அழுத்தங்களையும் தாண்டி திமுக தனது வாக்குகளைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதாகவே கருதவேண்டும்.

இந்தத் தேர்தலைப் புறக்கணித்த கட்சிகள் ஆளும் கட்சியை விமர்சித்தன. ஆனால் அவற்றின் வாக்குகள் யாவும் ஆளும் கட்சியான அதிமுகவுக்கே சென்றுள்ளன. பணபலத்தையும் அதிகார பலத்தையும் இந்தக் கட்சிகளின் வாக்காளர்கள் தாக்குப் பிடிக்கமுடியவில்லை எனக் கூறுவதா அல்லது இந்தக் கட்சிகளின் வாக்கு வங்கி அதிமுக வுக்கு ஆதரவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்வதா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.கூட்டணி அமைக்காவிட்டால் இந்தக் கட்சிகளின் வாக்குகள் அவற்றோடே இருக்காது என்பதையே இது காட்டுகிறது. 

இந்த நிலையில் 2016 இல் முதலமைச்சர் ஆவேன் எனக் கனவுகாண அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டும் தான் பலம் இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவின் அடிப்படையில் அதிமுக தனித்துப் போட்டியிட முடிவுசெய்யலாம். ஆனால் திமுக பலமான கூட்டணி ஒன்றை அமைத்தால் மட்டுமே 2016 தேர்தலை நம்பிக்கையோடு சந்திக்க முடியும். இந்யத இரண்டு கட்சிகள் தவிர மற்ற கட்சிகளுக்கு முதலமைச்சர் கனவு காணத் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.   


No comments:

Post a Comment