Thursday, February 19, 2015

உரு மாறுகிறதா பன்றிக்காய்ச்சல் வைரஸ்? - ரவிக்குமார்

( 13.08.2009 அன்று ஜூனியர் விகடனில் எழுதியது ) 

===========

பயப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம் என்று நாம் எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருந்தாலும் பன்றிக் காய்ச்சல் பீதி மக்களிடையே பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பன்றிக்காய்ச்சலால் ஏற்படும் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போக அதனால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. உலகின் 168 நாடுகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும், அர்ஜென்டினாவிலும் பன்றிக் காய்ச்சலின் இரண்டாவது அலை இப்போது மக்களை தாக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் குளிர்காலத்தில் இங்கிலாந்தில் இந்நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அங்கு கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒன்பது பேர் இறந்துள்ளனர். இதுவரை முப்பத்தாறு பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பன்றிக் காய்ச்சலால் மக்களிடையே பீதி பரவுவதற்குக் காரணம் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான். சரியான தகவல்கள் மட்டுமே அந்த விழிப்புணர்வை அளிக்கமுடியும். இந்த நோயைப் பற்றி மிகைப்படுத்திச் சொல்லி மக்களை பீதியடைய வைப்பது எப்படி தவறோ, அதேபோலத்தான் மக்களுக்கு தைரியமூட்டுகிறேன் என்ற பெயரில் இந்த நோயால் எந்த பாதிப்புமே வராது என்று ஒரேடியாக எல்லாவற்றையும் மூடி மறைப்பதும் தவறாகும். எனவே இதுகுறித்த சரியான தகவல்கள் அவை எவ்வளவு கசப்பானவையாக இருந்தாலும், அவற்றைத் தெரிந்து கொள்வது மிகவும அவசியம்.

இப்போது உலகைப் பயமுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் ஏற்கனவே 1918&19 காலக்கட்டத்தில் உலகை தாக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ நோயைப் போல கொடூரமானதாக இருக்குமோ என்ற அச்சம் பரவலாக விஞ்ஞானிகள் மத்தியில் உருவாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் உலகத்தையே பிடித்து உலுக்கிய அந்த நோய்க்கு சுமார் பத்து கோடி பேர் பலியானார்கள். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில்  பத்து முதல் இருபது சதவீதம் பேர்வரை இறந்து போனார்கள். இதுவரை மனிதகுல சரித்திரத்தில் மிகப்பெரிய கொள்ளை நோயாக அதுதான் வர்ணிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி பேர் இறந்து போனதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்பானிஷ் ஃப்ளூவுக்கான வைரஸ் ஆரம்பத்தில் சாதுவாகத்தான் இருந்தது. அடுத்தடுத்து அது உருமாற்றம் அடைந்து மிகவும் கொடூரமானதாக மாறியது. அதைப்போலவே இப்போதைய பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம் உருமாற்றம் அடைந்து மேலும் அதிகமான நாசத்தை விளைவிக்குமா? என்று விஞ்ஞானிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சிலர் அப்படி நடக்காது என்கின்றனர். சிலரோ அப்படி நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று குண்டைத் தூக்கிப் போடுகின்றனர். இதனிடையே ‘நியூ சைன்டிஸ்ட்’ என்ற பத்திரிகை  தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் அறுபது பேரிடம் சர்வே ஒன்றை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் மூன்று கேள்விகளை அந்தப் பத்திரிகை கேட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளூவைப்போல கொடூரமானதாக உருமாறறம் பெருமா? உங்கள் நாடுகளில் உள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் அப்படியரு நிலைமை வந்தால் அதை சமாளிப்பதற்குப் போதுமானதாக இருக்குமா? நீங்கள் இதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? என்பவையே அந்த மூன்று கேள்விகள். முதல் கேள்விக்கு பதிலளித்த நிபுணர்களில் முப்பது சதவீதத்தினர் பன்றிக் காய்ச்சல் வைரஸ் கொடூரமானதாக மாறுவதற்கு பாதிக்கு பாதி வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால் பெல்ஜியத்தைச் சேர்ந்த மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்டான வால்டர் ஃபயர் என்பவரோ, பன்றிக் காய்ச்சல் வைரஸ் கொடூரமானதாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், அப்படி அது மாறினால் இப்போது தயாரிப்பில் இருக்கும் தடுப்பூசி மருந்துகள் பயனற்றவை ஆகிவிடக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படி அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்தால் தற்போதுள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் அதை சமாளிப்பதற்கு போதுமானவையாக இருக்காது என்பதை பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குடும்பத்தைப் பொறுத்தவரை ஒருசிலர் மட்டுமே இதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். பெரும்பாலான மருத்துவ நிபுணர்களும் தங்களுடைய தற்காப்பைப்பற்றிக்கூட கவலைபடாமல்தான் இருக்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அண்மையில் விளக்கமளித்துள்ளது. ஆகஸ்ட் ஆறாம் தேதி இதற்காக பிரத்யேகமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை அது நடத்தியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் தொலைபேசி மூலமாகக் கேட்ட கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து உருவாக்குவது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும், அந்த மருந்தை பாவிப்பதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றியும் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வளர்முக நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி மருந்துகளை அனுப்புவதற்கு உலக சுகாதார நிறுவனம் தனிப்பட்ட கவனம் எடுத்துக்கொண்டுள்ளதா என்று அப்போது ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக ஒரு குறிப்பிட்ட அளவு மருந்தை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று மிகவும் முக்கியமானது. 1976ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு தடுப்பூசி போடப்பட்டபோது, அதனால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. ‘கில்லான் பார்ரே சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்பட்ட அந்த பக்க விளைவுப் பிரச்சனைக்கு ஆயிரக்கணக்கானோர் ஆளானார்கள். அப்படியான சிக்கல் இப்போதைய தடுப்பூசி மருந்தால் ஏற்படுமா? என்று ஒரு நிருபர் கேட்டார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை வேறு, இப்போதைய நிலை வேறு. மருத்துவத் துறையில் நாம் இப்போது பெருமளவு முன்னேறி விட்டோம். எனவே அத்தகைய ஆபத்து இப்போது ஏற்படாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் அதற்கு பதிலளித்தார்.

பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்காக உருவாக்கப்படும் தடுப்பூசி பற்றி உலக சுகாதார நிறுவனம் இப்படி விளக்கமளித்துள்ள நிலையில் பன்றிக் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தவதற்காக தற்போது வழங்கப்படும் டாமிஃப்ளு என்ற மாத்திரை குறித்து இப்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. அந்த மாத்திரைகள் குழந்தைகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று புகார்கள் கூறப்படுகின்றன. இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கையன்றை வெளியிட்டுள்ள ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மாத்திரைகள் குழந்தைகளின் காய்ச்சலை குறைக்கின்றன என்பது உண்மைதான் என்றபோதிலும், இதனால் அந்த நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடிவதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த மாத்திரைகளை சாப்பிடும் பெரும்பாலான குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு முதலான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை சாப்பிடுவதால் பக்க விளைவு உண்டாகும் என்று அதன் உறையிலேயே அச்சிடப்பட்டிருக்கிறது என்றபோதிலும், இந்த பாதிப்பு எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கவலை. குறிப்பாக பன்னிரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மாத்திரைகளை கொடுக்கும்போது பக்கவிளைவுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளன என்று அந்த மருத்துவ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பவர்களோ இந்த முடிவுகள் பன்றிக் காய்ச்சல் வந்த நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து பெறப்படவில்லை. வேறுவித தொற்றுநோய்களுக்கு இந்த மாத்திரைகளை வழங்கியபோது மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்துதான் இது சொல்லப்படுகிறது என்று விளக்கமளிக்கின்றனர். இப்படியான புகார்களை உலக சுகாதார நிறுவனமும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. டாமிஃப்ளு மாத்திரைதான் பன்றிக்காய்ச்சலுக்கு சரியான மருந்து. அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகமிக சொற்பமானவைதான் என்று அது மறுபடியும் உறுதிபடுத்தியுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள இன்னொரு கவலை, பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம், பறவைக் காய்ச்சல் வைரஸ§ம் ஒன்று சேர்ந்து இன்னும் பயங்கரமான புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கிவிடுமோ என்பதுதான். ஒப்பீட்டளவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மிகவும் கொடூரமானது. அதனால் பாதிக்கப்படுகிறவர்களில் சுமார் அறுபது சதவீதத்தினர் உயிரிழந்து விடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த வைரஸ் எளிதில் பரவுவதில்லை. பன்றிக் காய்ச்சல் வைரஸோ அந்த அளவு உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் இது மிகமிக எளிதாக பரவக்கூடியதாக இருக்கிறது. இந்த இரண்டு வைரஸ்களும் ஒன்றிணைந்து புதிய வைரஸ் ஒன்று உருவானால் அது எப்படி இருக்கும் என்பதைப் பற்றியே இப்போது விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர். இந்த இரண்டு வைரஸ்களும் ஆசிய நாடுகளில்தான் தற்போது அதிகமாக பரவிக்கொண்டுள்ளன. எனவே, இங்குதான் அவை ஒன்றிணைந்து புது வகை வைரஸாக உருவெடுக்கக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு முன்பு உலக அளவில் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய கொள்ளை நோய்கள் யாவும் பறவைகள் மூலம் பரவக் கூடியனவாக இருந்தன என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதுள்ள பறவைக் காய்ச்சல் அப்படியான புது அவதாரம் ஒன்றை எடுக்கும் பட்சத்தில் அது 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட கொள்ளை நோயான ஸ்பானிஷ் ஃப்ளூவைவிட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமும்கூட இதை மறுக்கவில்லை. பறவைக் காய்ச்சல் வைரஸ் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டுமென்று அது அறிவுறுத்தியுள்ளது. ஹெச்ஒன் என்ஒன் எனப்படும் பன்றிக் காய்ச்சல் வைரஸ§ம், ஹெச் ஃபைவ் என்ஒன் எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ§ம் கூட்டுசேரப் போகின்றனவா அல்லது அவை ஒன்றோடு ஒன்று இணைந்து புது வைரஸ் ஒன்றை உருவாக்கப் போகின்றனவா என்பது இனிமேல்தான் தெரியவரும். இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வைரஸின் குவி மையமாக இருக்கும் மகாராஷ்டிராதான் பறவைக் காய்ச்சல் நோய்க்கும் மையமாக இருந்தது. எனவே அங்கிருந்தேகூட அடுத்த ஆபத்து புறப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது.

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று உலகமே பரபரத்துப்போயிருக்கும் இந்தச் சூழ்நிலையில் பன்றிக் காய்ச்சல் வைரஸால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிவரும் நமது நாட்டிலோ அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மிக மந்தமாகத்தான் நடந்து வருகின்றன. தமிழ்நாடு இதில் பாராட்டத்தக்க முன்முயற்சிகளை எடுத்துள்ளது என்றபோதிலும், மத்திய சுகாதாரத்துறை இதில் எதிர்பார்த்த அளவு சுறுசுறுப்பாக இல்லை என்பதே உண்மை. பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அரசாங்க சோதனைக்கூடங்களில் இந்த சோதனை இலவசமாக செய்யப்பட்டபோதிலும் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அரசு தற்போது கூறியிருப்பதால் அங்கு முடிந்தவரை பணத்தைக் கறந்துவிடுவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த வைரஸைக் கண்டறிவதற்கான ‘டெஸ்டிங் கிட்’ வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது என்கிறார்கள். அதனால்தான் அது போதுமான அளவில் கிடைப்பதில்லை. எனவே விலை மலிவான ‘டெஸ்டிங் கிட்’ ஒன்றை இந்தியாவிலேயே உருவாக்கப்போவதாக இப்போதுதான் மத்திய அரசு அறிவித்துள்ளது. காலம் கடந்தாலும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதுதான்.

       இப்போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்: பன்றிக்காய்ச்சல் என்பது இன்று வந்து நாளை முடிந்துவிடப்போகிற ஒரு பிரச்சனை அல்ல. நீண்டகாலத்துக்கு நம்மை பாதிக்கவிருக்கிற ஒரு சிக்கல் அது. எனவே அரசாங்கம் எதைத் திட்டமிட்டாலும் அதை நீண்டகால நோக்கிலிருந்து திட்டமிடவேண்டும். நாமும்கூட நமது வாழ்க்கை முறையை இந்த ஆபத்தை மனதில் வைத்து அதற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment