Friday, February 20, 2015

பீஹார்: மதவாதத்தின் தோல்வி அல்ல சாதிவாதத்தின் வெற்றி! - ரவிக்குமார்



சாதி அரசியலின் உச்சகட்டமான கூத்துகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் பீஹார் மாநிலத்தில் இப்போது தலித்துகளே இல்லை எனக் கூறினால் கேட்பவருக்கு வியப்பு உண்டாகும். ஆனால் அதுதான் உண்மை. அங்கே தலித்துகள் எல்லோருமே மஹா தலித்துகள் என வகைப்படுத்தப்பட்டுவிட்டனர். 

தலித்துகளைப் பலவீனப்படுத்துவதற்கு நிதிஷ்குமார் செய்த தந்திரம்தான் மஹா தலித் என்ற வகைப்பாடு. ராம்விலாஸ் பாஸ்வானின் செல்வாக்கை பீஹார் அரசியலில் ஒழித்துக்கட்டவேண்டும் என்பதே நிதிஷ்குமாரின் உள்நோக்கம். அதற்காக அங்கிருக்கும் 22 தலித் உட்சாதிகளில் 18 சாதிகளைத் தனியே பிரித்து அவற்றை மஹாதலித்துகள் என நிதிஷ் அட்டவணைப்படுத்தினார். சில ஆண்டுகளில் மேலும் இரண்டு சாதிகள்
அதில் சேர்க்கப்பட்டன. அதன்பின்னர் இன்னொரு சாதியும் உள்ளடக்கப்பட்டது. 

பாஸ்வான் சாதியைத் தவிர மற்ற தலித் உட்சாதிகள் அனைத்தும் மஹா தலித்துகள் என வகைப்படுத்தப்பட்டு தலித்துகளிடையே முரண்பாட்டையும் மோதலையும் உருவாக்கினார் நிதிஷ். தலித்துகளைப் பிரித்து அரசியல் லாபம் அடைய முயன்றார். அதன் உச்சகட்டம் தான் ஒரு மஹா தலித்தான மாஞ்சியை முதலமைச்சராக்கியது. ஆனால் நிதிஷ் நினைத்தது நடக்கவில்லை. பொம்மை முதல்வராக இருக்க மறுத்து மாஞ்சி சுயச்சார்புடன் செயல்பட ஆரம்பித்தார். பாஜகவின் செல்வாக்கைத் தடுப்பதற்காக மட்டுமே நிதிஷ்குமாரால் மாஞ்சி முதல்வராக்கப்பட்டார். அதன்பின்னர் பீஹாரின் OBC தலைவர்களை ஒன்றிணைப்பதில் நிதிஷ் ஈடுபட்டார். அது நடந்துவிட்டால் தான் கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்படுவோம் என்பது மாஞ்சிக்கு நன்றாகவே தெரியும். இந்தப் பதவியின் தான் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்பதும் புரியும். அதனால்தான் புத்திசாலித்தனமாக சில நடவடிக்கைகளை எடுத்தார். 

மாஞ்சியை ஒரு விதூஷகரைப் போல சித்திரிப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றிவருகின்றன. அதற்கு அடிப்படையான காரணம் சாதி ரீதியான காழ்ப்புதான். 

மாஞ்சி எடுத்த நடவடிக்கைகளில் முக்கியமான இரண்டைக் குறிப்பிடவேண்டும்: 

1. நிதிஷ்குமாரின் சுயநலத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பாஸ்வான் உட்சாதியும் மாஞ்சியால்
மஹா தலித் அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நிதிஷால் பிளவுபடுத்தப்பட்ட தலித் உட்சாதிகள் அனைத்தையும் மீண்டும் ஒன்றிணைத்தது மட்டுமின்றி தலித்துகள் எல்லோருமே  மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்விதமாக அனைத்து தலித் உட்சாதிகளையும் மஹா தலித்துகள் என மாஞ்சி அறிவித்துவிட்டார். 

2. அரசாங்க கான்ட்ராக்ட் பணிகளில் 70 லட்ச ரூபாய்க்கும் குறைவான பணிகள் அனைத்திலும் மஹா தலித்துகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் மாஞ்சி ஆணை பிறப்பித்தார். 

இப்போது நிதிஷ் மீண்டும் முதல்வராவது உறுதியாகிவிட்டது. நிச்சயம் இதை பாஜக வின் சதிக்கு எதிரான மதச்சார்பற்ற சக்திகளின் வெற்றி என எல்லோரும் தம்பட்டம் அடிப்பார்கள். ஆனால் இது மதவாதத்தின் தோல்வி அல்ல; சாதிவாதத்தின் வெற்றி! 

பதானி தோலாவில், லக்ஷ்மண்பூர் பாதேவில், ஷங்கர்பிகாவில் தலித்துகளைக் கும்பல் கும்பலாகப் படுகொலைசெய்த ரண்வீர் சேனா கொலையாளிகளுக்கு ஆதரவாக இருந்தவர் நிதிஷ். ரண்வீர் சேனாவின் அரசியல் தொடர்புகுறித்து விசாரிப்பதற்காக ராப்ரி தேவி அரசு அமைத்த அமீர்தாஸ் கமிஷனை கலைத்தவர் நிதிஷ்குமார். ரண்வீர் சேனா கொளையாளிகள் போதுமான ஆதாரம் இல்லை எனக் காரணம்
காட்டி நீதிமன்றத்தால் விடுவிக்கபடுவதற்குக் காரணமாக இருந்தது நிதிஷ் அரசாங்கம். 

பீஹாரில் மீண்டும் ஒரு மஹா தலித் முதல்வராக வர முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஒரு மஹா தலித் முதல்வராக வந்தால் அவர் என்ன செய்யவேண்டுமோ அதை மாஞ்சி செய்திருக்கிறார். பாராட்டுகள் திரு. மாஞ்சி அவர்களே! 

 

No comments:

Post a Comment