Tuesday, November 2, 2010

கிரந்த எழுத்துகளோடு தமிழ் : அவசரக் கூட்டம்







03.11.2010
மாலை   04 மணி
சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள செம்மொழி அலுவலகம்

கிரந்த எழுத்துகளோடு தமிழ் எழுத்துகளைச் சேர்க்கலாமா என்பது குறித்து விவாதித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் தெரிவிப்பதற்காக அவசரக் கூட்டம் ஒன்று சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள செம்மொழி அலுவலகத்தில் இன்று மாலை நான்கு மணிக்குக் கூட்டப்படுகிறது. மாண்பமை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்கள் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ( இதுகுறித்து நான் எழுதியிருக்கும் செய்தியைப் பார்க்கவும் ) 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி பலருக்கும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் . இதில் தெரிவிக்கப்படும் கருத்துகளைத் திரட்டித் தமிழக முதல்வர் அவர்களிடம் அளித்து அவர்மூலமாக மைய அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதெனத் திட்டம். கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் இந்த சர்ச்சை தொடர்பான விவரங்களைப் படித்துவிட்டு வருவது பயனுடையதாயிருக்கும். 
தமிழ் மொழி தொடர்பான இந்த சர்ச்சை குறித்து  ஈழத்துத் தமிழ் அறிஞர்களான திரு. கா.சிவத்தம்பி , திரு. எம்.ஏ. நுஹ்மான் , திரு.வேலுப்பிள்ளை போன்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது தெரியவில்லை. உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் அறிஞர்கள் யாவரும் கவலைகொள்ள வேண்டிய பிரச்சனை இது. 
இந்தப் பிரச்சனை குறித்துத் தெளிவான நிலையை மேற்கொள்ளவேண்டுமேனில் தமிழ் இலக்கண அறிவும் , சமஸ்கிருதப் புலமையும் , கணினி பற்றிய ஆழ்ந்த அறிவும் இருக்கவேண்டும். தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை கொண்டவர்களுக்கு சமஸ்கிருதமோ , ஒருங்குறி தொடர்பான தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களோ தெரிவதில்லை. சம்ஸ்கிருத அறிஞர்களுக்கோ  தமிழ் குறித்த எதிர்மறையான அணுகுமுறையிலிருந்து விடுபட முடிவதில்லை. இந்த நிலையில் பன்மொழிப் புலமையும் , கணினித் தொழில்நுட்ப அறிவும் கொண்ட மிகச் சிலரின் கருத்துகளை நம்பியே நாம் செயல்படவேண்டி உள்ளது. 
மொழியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்  மிக முக்கியமான இந்தத் தருணத்தில் மாநில அரசைக் கொஞ்சமும் கலந்து ஆலோசிக்காமல் மைய அரசு செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. தற்போது தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை ஒன்றை மைய அரசு தயாரித்திருக்கிறது. அதுகுறித்தும் மாநில அரசை அவர்கள் கலந்து பேசவில்லை. இதுபற்றி நேற்று நான் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. தங்கம். தென்னரசு அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டேன். தமிழக அரசின் சார்பில் 'மாநில புத்தக ஆதரவுக்கொள்கை' ஒன்றை நாம் ஏன் உருவாக்கக் கூடாது? என்று கேட்டேன். அப்படிச் செய்தால் நல்லதுதான் என அவர் கூறினார். தமிழ் இனம் மிகவும் விழிப்போடு இருக்கவேண்டிய நேரம் இது. 

2 comments:

  1. மிக சிறிய அளவு கிரந்தமும், கணினி மொழியும், ஓரளவு தமிழும் , ஆங்கிலமும் கற்றவன் நான்.

    முதல் விஷயம்- கிரந்தம் வேறு, சமஸ்க்ரிதம் வேறு, ஹிந்தி வேறு.

    ஐந்து அல்லது ஆறு தமிழ் எழுத்துக்களை, கேரக்டர்களை கிரந்த மொழிக்கோ அல்லது வேறு மொழிக்கோ நாம் கொடுப்பதால், பயன்படுத்த அனுமதிப்பதால் தமிழ் கண்டிப்பாக அழிந்து போகாது என்பதே என் கணிப்பு, கருத்து.

    அதே போல வேறு மொழிகளில் இருந்து ஐந்து எழுத்துகள், வார்த்தைகள், கணினி கம்மேன்ட்கள் வாங்கி பயன் படுத்துவதாலும் தமிழ் அழியப் போவதில்லை.

    இன்று வரை ஆங்கிலம் பல காரக்டர்களை பிற மொழிகளுக்கு பயன் படுத்த வழங்கி வருகிறது. இதனால் ஆங்கிலம் ஒன்றும் அழிய வில்லை. example- @, $, %, +, -

    வள்ளுவர் கூறி உள்ளது போல தொட்டனைத்து ஊரும் மணர் கேணி. .
    எனவே அறிவும், மொழியும் பிறருக்கு கொடுக்க கொடுக்கவே வளரும்.

    அதை விடுத்து இது என் சொத்து இதை வேறு ஒரு மாநிலதவனுக்கு , நாட்டிற்கு கொடுக்க மாட்டேன் என்ற குறுகிய சுயநலம் சார்ந்த மனப்பான்மையை விட்டு ஒழிவோம்.

    ReplyDelete
  2. இவ்வாறு தமிழ் எழுத்துக்களை, காரக்டர்களை , வார்த்தைகளை பிற மொழியினர் பயன் படுத்த அனுமதிப்பதால் மிகப் பெரிய நன்மை ஏற்படும்.
    அந்த மொழியினருக்கு தமிழ் பற்றிய ஒரு ஆர்வம் வரும், அதில் ஒரு சிலராவது தமிழ் பற்றி மேலும் படிப்பர்.

    இப்படிப் பகிர்வதால் தான் அறிவும், மொழியும், இலக்கியங்களும் வளரும்.

    ReplyDelete