Wednesday, October 27, 2010

கடந்து செல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் - தலித் உடல் - தேன்மொழி







முன்னுரை :
    நம் காலத்திய பிரச்சனைகள் எல்லாவற்றையுமே ஒருவிதத்தில் அதிகாரம் குறித்த பிரச்சனைகள் என்று நாம் சுருக்கமாகக் கூறிவிட முடியும். வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் பரவி நின்று நம்மை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது அதிகாரம். அதிகாரம் ஒரு புள்ளியிலிருந்து புறப்படுகிறது என்ற கருத்து இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அதிலிருந்து விடுபட்ட நிலை என ஏதும் இருக்க முடியாது என்பதே இன்று நாம் வந்தடைந்திருக்கிற புரிதல். இந்தச் சூழ்நிலையில் விடுதலை, சுதந்திரம் என்பவற்றின் பொருள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி நம்முன் எழுகிறது. அதிகார சமன்பாடுகளை மாற்றி அமைப்பது மட்டுமே இன்றைக்கு சாத்தியம் என்னும் நிலையில் அதிகாரமற்ற நிலையைக் கற்பனை செய்து கொண்ட தத்துவங்கள் யாவும் இன்று வழக்கொழிந்தவையாக மாறிவருகின்றன. இது ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் மற்ற பிரிவினர் இந்த உண்மையை எப்படிப் புரிந்துகொண்டாலும் இந்தியச் சூழலில் சாதியக் கருத்தியலின் விளிப்புக்கு ஆட்பட்டு தன்னிலைகளாகக் கட்டமைக்கப்பட்டிருப்பவர்கள் குறிப்பாக ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுபவர்கள் இந்த சிக்கலை மிகுந்த அக்கறையோடு அணுகவேண்டியிருக்கிறது.
அதிகாரத்தின் வேறுபட்ட வடிவங்கள்:
 அதிகாரத்தின் உற்பத்தியும் பரவலும் பல்வேறுபட்ட நிலைகளில் தன்மைகளில் நடக்கிறது. அதைப்போலவே அதை எதிர்த்த போராட்டங்களும் எத்தனையோ விதங்களில் வெளிப்பாடு கொள்கின்றன. சமூகத்தில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தையும் ஒரு வசதி கருதி நாம் மூன்று வகைமைகளின்கீழ் அடக்கலாம். அ.. மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள். ஆ. பொருளாதார சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்கள் இ. தனி மனிதர்களைத் தாம் விரும்பும் தன்னிலைகளாக மாற்றி அடிமைப்படுத்தி வைக்க விரும்பும் அதிகாரத்துக்கு எதிரான போராட்டங்கள் எனப் பரந்த பொருளில் இப்படி மூன்றாக நாம் வகைப் படுத்திக்கொள்ளலாம்.
      அ. மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள்:
உலகில் இனங்களின் அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும், மொழிகளின் அடிப்படையிலும் மனிதன் பிரிந்து கிடக்கின்றான். இந்தப் பிரிவினைகள் மனிதர்கள் தாமே விரும்பி ஏற்படுத்திக் கொண்டவை எனக் கூற முடியாது. மனிதகுல வரலாற்றில் மாறி வந்திருக்கும் பல்வேறு கட்டங்களில் மனிதர்கள் தவிர்க்க முடியாமல் இத்தகைய அடையாளங்களை சுமக்க வேண்டியவர்களாகிவிட்டனர். ஒரு கட்டத்தில் மனிதன் தனது பாதுகாப்புக்கென உருவாக்கிக் கொண்ட இந்த அடையாளங்கள் பின்னர் அவனுக்கு சுமையாகவும் விலங்காகவும் மாறிவிட்டன. முதலில் அடையாளங்களை அவன் பயன்படுத்தினான். பிறகோ அடையாளங்கள் அவனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. மொழி அடையாளமாக இருந்தாலும், இன அடையாளமாக இருந்தாலும், மத அடையாளமாக இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்துகிற ஆற்றல் இப்போது மனிதனுக்கில்லை. அந்த அடையாளங்களின் கைதியாக அவன் மாறிவிட்டான்.
கூட்டுணர்வு கருதியும் பாதுகாப்புக்காகவும் ஒரு அடையாளத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சமூகக் குழு அதனால் கிடைக்கும் அதிகாரத்தை சுவைத்தபின் அதையே தனது ஆதிக்கக் கருவியாக மாற்றுகிறது. இன்னொரு அடையாளத்தை ஏற்றுக்கொண்டுள்ள சமூகக் குழுவை மேலாதிக்கம் செய்ய அது முனைகிறது. அந்த அதிகாரப் போட்டி பல சமயங்களில் ரத்தம் பெருக்கெடுக்கும் யுத்தங்களாக வெளிப்பட்டதை வரலாறு நெடுக நாம் பார்க்க முடிகிறது. அந்த சமரில்  தோல்வி அடைந்த சமூகக் குழுக்கள் அடிமைப்பட்ட நிலையில் கிடந்து உழல நேர்ந்ததை நாம் அறிவோம். அடையாளங்களின் வழியே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆதிக்கத்தை அதேவிதமாக எதிர்கொள்ளவே மனித குலம் சபிக்கப்பட்டிருக்கிறது. எனவே அடிமைத்தளையிலிருந்து விடுபட யத்தனிக்கும் சமூகக் குழுக்களும் அடையாளங்களின் வழியே தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அண்மைக்கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய அடையாளங்களை அடிப்படையாகக்கொண்ட ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களே உலகில் நடந்துவருவதை நாம் உணரலாம். அரசியல் மொழியில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் எனக் குறிக்கப்படும் இந்த வகையான போராட்டங்கள் குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் வெளிப்பாடுகொண்டன.

       ஆ. பொருளாதார சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்கள்:
ஒரு தனி மனிதனை அவன் உற்பத்தி செய்யும் பொருளிலிருந்து பிரிக்கும் சுரண்டல் வடிவங்களுக்கு எதிரான போராட்டங்கள் என இவற்றை நாம் குறிப்பிடலாம். வரலாற்றில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களையவேண்டும் எனப் பல்வேறு சிந்தனையாளர்களும் பலவிதமான முன்மொழிவுகளைக் கூறியுள்ளபோதிலும் கார்ல் மார்க்ஸின்(1818----& 1883) தத்துவமே இதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும், வியட்நாமிலும் இப்படியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை நாம் வரலாற்றில் பார்த்தோம். அதிகாரம் என்பது அரசில் தங்கியிருக்கிறது என நம்பிய இந்தத் தத்துவம் அரசை கைப்பற்றுவதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டுவிட முடியும் எனக் கூறியது. உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகியவை எவ்வாறு அதிகாரத்தோடு பின்னிப் பினந்திருக்கின்றன என்பதையும் அது எடுத்துக்காட்டியது. லாபம் என்பது உபரிமதிப்பைச் சுரண்டுவதுதான் என விளக்கிய அது முதலாளித்துவமானது அனைத்து உறவுகளையும் லாபத்தை அடிப்படையாகக்கொண்ட சுரண்டல் உறவுகளாக மாற்றிவிட்டதையும் சுட்டிக்காட்டியது. அந்தத் தத்துவத்தின் வெளிச்சத்தில் நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்களை நாம் இந்த வகைப்பாட்டில் சேர்க்கலாம்.
       இ. தன்னிலையாக்கத்துக்கு எதிரான போராட்டங்கள்:
தன்னிலைத்துவம் என்பதையும் அடையாளம் என்பதையும் நாம் வேறுபடுத்திப் புரிந்துகொள்ளவேண்டும். தனிநபராக இருக்கும் ஒருவரை கருத்தியல்தான் தன்னிலையாக வடிவமைக்கிறது. அடையாளம் என்பதைவிடவும் ஆழமான பொருள் கொண்டது தன்னிலைத்துவம். கருத்தியலின் விளிப்புக்கு ஆட்படும் ஒரு தனிநபர் எப்படி ஒரு தன்னிலையாக உருப்பெறுகிறார் என்பது உற்றுநோக்கத்தக்கதாகும். ஒரு தனி மனிதனை அவனோடு பிணைத்து அவனை அதே விதமாக பிறருக்குக் கீழ்ப்படிய வைக்கும் வடிவங்களுக்கு எதிர

No comments:

Post a Comment