Monday, October 18, 2010

தென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்பது ஆண்டுகள்







தென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்பது ஆண்டுகள் 

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின்போது தென் ஆப்ரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கெனத் தென் இந்தியாவைச் சேர்ந்த மக்கள் கொண்டுசெல்லப்பட்டனர். 1860 ஆம் ஆண்டு முதல்  1911 வரை இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். இந்தி , தெலுங்கு, மலையாளம் , தமிழ் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட சுமார் பதினான்கு லட்சம் இந்தியர்கள் அங்கு இப்போது வாழ்கின்றனர். அவர்களுள் பத்து லட்சம் பேர்வரைத் தமிழர்கள் இருக்கின்றனர். 
இந்தியாவிலிருந்து தென்னாப்ரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். முதல் கட்டமாக அழைத்துச் செல்லப்பட்ட எழுத்தறிவற்ற கூலிகள்; இரண்டாம் கட்டமாக, அங்கு இருந்த வெள்ளையர்களின் வீடுகளில் உதவியாளர்களாக , சமையல்காரர்களாக வேலை செய்வதற்கென அழைத்துச் செல்லப்பட்ட அரைகுறை படிப்பாளிகள் ;   மூன்றாம் கட்டமாகத்   தங்கள் விருப்பத்தில் வணிக நோக்கில்  சென்றவர்கள் . அவர்களின் சந்ததியினர்தான்  இன்று தென் ஆப்ரிக்காவில் வாழும் தமிழர் உள்ளிட்ட இந்தியர்கள். அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதன் நூற்றி ஐம்பதாவது ஆண்டை இப்போது கொண்டாடுகின்றனர். எதிர்வரும் நவம்பர் இருபத்தொன்றாம் தேதி தென்னாப்ரிக்காவில் இருக்கும் டர்பன் நகரில் மிகப்பெரும் விழா ஒன்றை அவர்கள் நடத்த உள்ளனர். அதில் தென்னாப்ரிக்க அதிபர் ஜூமா கலந்துகொள்ள இருக்கிறார். 
தென்னாபிரிக்கத் தமிழர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று தமிழகம் வந்திருந்தது. அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும் , அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல் ஏ வும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். அக்குழுவினர் முன்வைத்த கோரிக்கைகளை இந்த இருவரும் முதல்வரிடம் விளக்கிக்  கூறினர். 

1. தென்னாப்ரிக்காவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் இப்போது தமிழைப் பேசவோ படிக்கவோ இயலாத நிலையில் உள்ளனர். ஆனால் அவர்கள் தமது குழந்தைகளுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க  விரும்புகின்றனர். எனவே அதற்கு உதவும் வகையில் பாடநூல்களையும் , ஆசிரியர்களையும் தமிழக அரசு வழங்கி உதவ வேண்டும். 

2. தென்னாப்ரிக்காவில் தமிழர்கள் அடர்த்தியாக வசிக்கும் டர்பன் நகரில் தமிழ் நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும்.

3. தென்னாப்ரிக்கப் பல்கலைக் கழகங்கள் ஏதேனும் ஒன்றில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவ வேண்டும். 

4. தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகளை தென்னாப்ரிக்காவில் அறிமுகப்படுத்தும் வகையில் இங்கிருந்து கலைஞர்களை   அனுப்பி வைக்கவேண்டும். 

5. நடக்கவிருக்கும் விழாவில் கலந்துகொள்ள தமிழக அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பவேண்டும் .

   - என்ற கோரிக்கைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டன. அவற்றைப் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.  

No comments:

Post a Comment