Thursday, October 21, 2010

வினோதினி கவிதைகள்

1.
சந்தித்தல்


சந்திப்பதற்கென
ஒரு நாளின் மாலையைத் தேர்ந்தேன்
கொஞ்சம் கவிதைகள்
கனிவூட்டும் இன்னிசை
காதலின் சுவை கலந்த தேநீர்
வாசனை தந்து வரவேற்க மலர்கள்
எல்லாம் ஆயத்தமாக.
அழகிய மாலைகளும்
கடிகாரமும் யாருக்காயுங் காத்திருப்பதில்லை
மஞ்சள் மாலை மெதுவாய்க் கறுக்க
மணலிற் பரவும் நீரெனப் பரந்தது இரவு
நிகழாது போன வருகையும்
பகிரப்படாத கவிதைகளும்
சொல்லப்படாத காதலும்
பருகப்படாத தேநீரும் வாடும் பூக்களோடு
ஒவ்வொரு அழகிய மாலையிலும்
எங்கோ ஒரு வீட்டின் தோட்டத்தில் கைவிடப்படுகின்றன.

2.

காலம் எதற்குங் காத்திராது நழுவுகிறது
நீண்ட பாதைகளில்
எதிர்ப்படும் மாந்தரில் எவரும்
அறிந்தவராயில்லை.
பயணங்களில்
கடக்கின்ற பிரதேசங்களின் தேசப் படங்களில்
முகவரி பற்றிய சந்தேகங்களுந் தீர்வதாயில்லை.
விரையும் வாகனத்தினூடு தென்படும்
ஊரோரக் குடில்
கையசைக்கும் சிறுமி
யாரோ கைவிட்ட ஒரு வீடு
வெளேரென்ற செம்மறியாட்டுக் கூட்டம்
சூரியகாந்திப் பூக்கள்
சிறு பழக் கடை என எல்லாமே
எப்போதோ விட்டுப் பிரிந்தவைகளையும்
அழிக்கப்படுகின்ற ஒரு வரலாற்றையும்
ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடிவதில்லை

3.

இலையுதிர் காலத்தில்
எதைப்பற்றி நீ கேட்கிறாய்?
யாராலும் எழுதி விட முடியாக் கவிதை போல்
இந்தக் காதலும் நிகழ முடியாதது.
இராமனின் சந்தேகங்கள் தின்ற சீதையின்
வழி நெடுகிலும் பூக்களா உதிர்ந்து கிடந்தன?
சற்றேனுந் தயக்கமின்றி
நீண்ட தனிமைக்குத் தயாராகின்றன
முற்றத்து மரங்கள்.
எதிர்ப்பின்றி இலைகள் விழுதலை விட
அழகாய் வேறென்ன இருக்கிறது?
இப்போதைக்கு
காதல் பற்றிய கலந்துரையாடலைத் தள்ளி வைப்போம்.

4.

முன்பு பச்சை
இடையில் மஞ்சள்
இப்போது செந்தழல் நிறமாகின்ற இலைகள்
மரத்தின் பொறுமை நம்மிடத்திலில்லையென்கிறாய்.
ஆனால்
நிறங்களை எப்போதாகினும் இரசித்ததுண்டா நீ

5.

அறை
மழை மாலை
மெல்லெனப் பரவுமிருள்.
வளரத் தொடங்கிய நிலவுத்துண்டு
ஓரிரு தாரகைகள்.
வானுயர்ந்த கட்டடங்கள்
ஒன்றிரண்டு நத்தார் விளக்குகள்.
மூங்கில் திரை கீழிறங்க
யாவும் மறைந்து போகன்றன
வெள்ளைச்சுவர்களின் மத்தியில்
அலமந்த கண்களுக்குக் காட்சிகள் பல.
களிமண் பிள்ளையார்
ஒர்கிட் தொட்டிகள்
புத்தக அலுமாரி
மழைக் காலணிகள்
ஆங்கிலம் மட்டுமே பேசும் வானொலி
வீட்டுக் கடிதங்கள்
பாட்டியின் முகச் சாயலோடு
ஆபிரிக்கப் பெண்ணின் புகைப்படம்
எனது துணைவனின் உடமைகள்
நமது கணனிகளென நிறைந்த அறையினுள்
நான் தனியே பேசுகிற
பைத்தியமென நினைப்பின்
எப்போதாயினும்
சந்திக்கும் வேளை
என் கண்களைப் பாருங்கள்.


 நன்றி மணற்கேணி  

No comments:

Post a Comment